தென் ஆப்ரிக்காவில் “டெட்டால்’ விற்பனைக்கு ஏன் தடை தெரியுமா..?
ஜோகன்னஸ்பர்க்: கிருமி நாசினியான, டெட்டாலுக்கு, தென் ஆப்ரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. “இது, பாக்டீரியாக்களை முற்றிலும் அழிப்பதில்லை’ என, அந்நாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில், கிருமி நாசினியாக, டெட்டால் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதால், 99.9 சதவீத பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாக, அந்நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. இதுகுறித்து, தேசிய தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தை சேர்ந்த, தாமஸ் மட்ஸ்வே கூறியதாவது : பிரிட்டனை சேர்ந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் டெட்டால், 99.9 சதவீதம் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டதாக, விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதன் பாட்டிலிலும், அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எங்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரத்தை, சோதனையிடுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்பட்ட சோதனையில், அந்நிறுவனம் தெரிவித்துள்ளபடி, 99.9 சதவீத பாக்டீரியாக்கள் அழிக்கப்படவில்லை. இதனால், அந்நிறுவன விளம்பரங்களை நம்பி, வாடிக்கையாளர்கள் இதை உபயோகிப்பதால், அவர்களுக்கு தீமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, டெட்டால் விற்பனைக்கு, எங்கள் நாட்டில் தடை விதித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதே போல், வேறு சில காரணங்களுக்காக, மற்றொரு கிருமி நாசினியான, டாமெஸ்டோஸ் விற்பனைக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 4,000 டெட்டால் பாட்டில்கள் மற்றும், 8,000 டாமெஸ்டோஸ் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.