இப்போதெல்லாம் எதற்கெல்லாம் போராடுவது என்று எல்லையே இல்லாமல் ஆகிவிட்டது. முன்பெல்லாம் ஏதாவது பெரிய கோரிக்கையோடு தான் போராட்டக் களத்துக்கே வருவார்கள். அதிலும் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் ரொம்ப பெரிய விசயம். மகாத்மா காந்தி, ஆங்கிலேயனுக்கு எதிராக எடுத்த அஸ்திரமே உண்ணாவிரதப் போராட்டம் தான். இங்கே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தில் ஒரு கல்யாணத்தை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்!மேற்கு வங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு ஆனந்த பர்மன் என்னும் வாலிபர், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக லிப்பிக்கா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கு இடையிலும் எட்டு ஆண்டுகளில் காதல் விறு, விறுவென வளர்ந்தது.
ஓர் உடல் ஈர் உயிர் என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு இடையிலான காதல் மிகவும் ஆத்மார்த்தமாக போய்க் கொண்டிருக்கும் போதே, திடீரென லிப்பிக்காவிடம் லேசான மனமாற்றம் தெரிந்தது.ஒருகட்டத்தில் ஆனந்த பர்மனோடு இருந்த பேச்சு, பழக்கத்தையும் மொத்தமாக நிறுத்திவிட்டார் லிப்பிக்கா. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆனந்த பர்மன் இதுகுறித்து விசாரித்த போது லிப்பிகாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தது தெரிய வந்தது. உடனே ஆனந்த பர்மன் சோந்து விடவில்லை.
தனது காதலி லிப்பிகாவின் வீட்டு முன்பு பதாகையுடன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். அந்த பதாகையில், ‘’என் காதலை திருப்பிக் கொடு’’ ‘’எனது எட்டு ஆண்டுகளை திருப்பிக் கொடு” என எழுதியிருந்தது.இது ஊருக்குள் பரபரப்பானது. லிப்பியாவின் ஊர்க்காரர்கள் பர்மனின் போராட்டத்தில் நியாயம் இருப்பதாக பேசத் துவங்கினார்கள். ஊடகங்களில் இந்த செய்திகள் வர,லிப்பியாவை பெண் பார்த்துவிட்டு சென்ற மாப்பிள்ளை வீட்டுக்கும் இந்த தகவல் போய்ச் சேர்ந்தது.
வீட்டு வாசலில் காதலன் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி அறிந்து உள்ளூர் போலீஸார் வந்து விசாரணை நடத்திச் சென்றனர். ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பர்மனின் உடல் நிலை மோசமானது. இத்தனை நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின்னர் லிப்பியாவும், அவரது குடும்பத்தாரும் பர்மனை மணக்க சம்மதிக்க அப்புறமென்ன டும்..டும்..டும்..தான்!
பர்மன் தனி ஒருவனாக உண்ணாவிரதம் இருந்து பல நூறு பேருக்கு கல்யாணச் சாப்பாடு போட்டிருக்கிறார்.