பிறந்த குழந்தை உட்பட அனைவருக்கும் கொரோனா… மறைந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் பிறந்த குழந்தை உட்பட வீட்டில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.பிரபல நடிகை மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள். கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக, சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணமடைந்தார்.சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.
நடிகை மேக்னா ராஜுக்கு சமீபத்தில் ஆண்குழந்தைப் பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் கூறினர். குழந்தையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. விரைவில் பெயர் சூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று கூறியிருந்தார், மேக்னா ராஜின் அப்பா சுந்தர் ராஜ்.
இந்நிலையில், நடிகை மேக்னா ராஜ் வீட்டில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அம்மா பிரமிளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் தந்தை சுந்தர்ராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதனை மேக்னா ராஜ் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி சோசியல் மீடியாவில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். என் தந்தை, அம்மா, நான் மற்றும் என் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களை சந்தித்தவர்களிடம் இந்த முடிவு பற்றி தெரிவித்துள்ளோம். நாங்கள் நலமாக இருக்கிறோம் என ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
இப்போது சிகிச்சையில் இருக்கிறோம். ஜூனியர் சிரஞ்சீவி சார்ஜா நலமாக இருக்கிறார். நாங்கள், குடும்பமாக இந்த கொரோனா போரில் வென்று வெற்றிகரமாக வருவோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.