ஒரு காலத்தில் உலகின் பசுமையான நகரில் ஒன்றாக கேப்டவுன் நகரம் விளங்கியது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதைவிட மக்களின் அலட்சியம் ஆகிய காரணங்கள் ஒன்று சேர, இன்று ஒரு சொட்டுத் தண்ணீருக்காக கையேந்த உள்ளது கேப்டவுன் நகரம்.
கடந்த 2007ம் ஆண்டே, தென்னாப்பிரிக்க நீர் விவகாரங்கள் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், மக்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், தக்க நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீதும் புகார்கள் எழுகின்றன.
கேப்டவுனில் பஞ்சம் தீரவில்லை என்றால் மக்களிடையே நீருக்காக சண்டைகள் ஏற்படும். பணம், காரை திருடும் முறை மாறி, தண்ணீரை திருடும் சூழல் உருவாகும்.
அப்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு காவல்துறை, ராணுவம் கொண்டு அரசு மக்களை ஒடுக்கும். இதனால் கலவரங்கள் உருவாகும். ஒரு நகரத்திற்குள் ஏற்படும் நீர் வறட்சிப் போர், மற்ற நாடுகளிடையேயான போராகவும் கூட மாறலாம்.
நாம் இந்த செய்தியை வெறும் உலகச்செய்தியாக நினைத்து கடந்து போகப் போகிறோமா? நமக்குத்தான் குடிக்க தண்ணீர் எளிதாக கிடைக்கிறதே என்று அலட்சியமாக கடந்து செல்லப் போகிறோமா.? நைஜீரியா, சோமாலியா, சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கேப்டவுனின் முக்கால்வாசி நிலையை தாண்டிவிட்டது…
ஈரானும் இஸ்ரேலும் அரை கிணறு தாண்டி விட்டது. விரைவில் இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பாராளுமன்ற தேர்தலில் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தையும் காவு வாங்க தயாராகி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வுகள் உண்மையானால் அடுத்து…
வேற யாரு… நம்ம தான்...!!!
இப்போதே நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை என்றால்… கேப்டவுனின் நிலையை நாமும் சந்திக்கப்போகும் நாள், வெகு தொலைவில் இல்லை.