மழை, நிழல் மட்டுமல்ல… பறவைகளுக்கு வசிப்பிடமும், கால்நடைகளுக்குத் தழையும், மனிதர்களுக்குச் சகலமும் தருகிறேன்.
மண்ணரிப்பையும் தடுக்கிறேன். இப்படி எல்லோருக்கும் எல்லாமும் தரும் என்னை, ஏன் வெட்டுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் அழிந்துவிடுகிறேன். அது இயற்கை. அதை, மாற்ற முடியாது. ஆனால், சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், உயர் அழுத்த மின்பாதை கோபுரம் அமைத்தல் போன்ற காரணங்களால் என்னை அகற்றுகிறார்களே… அதை, எங்கே போய்ச் சொல்வது?
என் பயன் அறியாத சில மானிட ஜென்மங்கள், போராட்டம் என்ற பெயரில் என்னை வெட்டிச் சாய்க்கின்றன. இப்படித் தினந்தோறும் நான் அழிக்கப்படுவதால், சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகிறது… வெப்பச்சலனம் ஏற்படுகிறது… மழைப்பொழிவு குறைகிறது.
இதற்கு எல்லாம் யார் காரணம்? நீங்கள்தானே… இப்படி என்னைப்பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றன. இதையெல்லாம் சொல்வது யாராக இருக்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம்… நான் மரம்தான் பேசுகிறேன்.
‘‘என்னைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாமே?’’