பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள், உண்மைதான். ஆனால் பாம்புதான் உண்மையிலேயே மனிதனைக் கண்டு நடுங்குமாம்.

0 325

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள், உண்மைதான். ஆனால் பாம்புதான் உண்மையிலேயே மனிதனைக் கண்டு நடுங்குமாம். அதற்கு காரணம் மனிதனிலிருந்து வெளிவரும் வாடைதான் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அதாவது மனித வாடை பாம்பை எச்சரிக்கையடைய வைக்கின்றது. இதனால் மனிதனை நெருங்குவதிலிருந்து பாம்பு பின்வாங்கிவிடுகிறது. பாம்பு ஒருபோதும் நம்மைத் தேடிவந்து கடிப்பதில்லை. நாம் தான் தெரிந்தோ தெரியாமலோ அதன் வழியில் குறுக்கிட்டு அதனிடம் கடி வாங்குகிறோம்.

பிரதேசங்களில் சாதாரணமாகவே பல விஷப்பாம்புகள் காணப்படுகின்றன. இவற்றில் நான்கே நான்கு பாம்புகளிடமிருந்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நான்கு பாம்புகளினதும் விஷம் நாம் உயிருடன் போராடுவதற்கு மேலதிக நேரத்தைத் தருவதில்லை.இந்தப் பாம்புகள் கடித்தவுடன் அவற்றின் விஷம் நமது உடலில் வேகமாகப் பரவி நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றது.

அதனால் மரணத்தின் வருகை தாமதமின்றி நடந்துவிடுகிறது.அந்த நான்கு பாம்புகளும் எவையெனில், நாகபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என்பனவே. இவை தான் நமது சூழலிலுள்ள மிக ஆபத்தான பாம்புகள்.பாம்புக்கடியால் உயிரைவிடும் மனிதர்களில் 99 வீதமானோர் கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் இறந்துபோகின்றனர். உண்மையில் பாம்புக்கடியின் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் பெரும்பாலான மக்களுக்கு போதிய முன்னறிவு இல்லை என பல ஆய்வுகளும் தெரிவித்துவருகின்றன.‘யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்;

பாம்பு துரத்தினால் நேராக ஓட வேண்டும்’ என்று நமது மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள், உண்மைதான். ஆனால் பெரும்பாலான பாம்புகள் மனிதர்களைத் துரத்துவதில்லை.அதிகமாகச் சீண்டப்பட்டதனால் மூர்க்கம் கொண்ட பாம்புகள்தான் சிலவேளைகளில் மனிதர்களைத் துரத்துகின்றன. சிலவகை மலைப்பாம்புகள் அவ்வகையானவை.

இந்தத் துரத்தலின்போது நாம் வளைந்து வளைந்து ஓடுவதைவிட நேராக ஓடவேண்டும் என்கிறார்கள். நாம் நேராக ஓடுகின்ற போது வளைந்து வளைந்து ஓடுகின்ற பாம்பின் பார்வைக் கோணத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் துரத்துவதிலிருந்து அது சலிப்படைந்து அந்த நடவடிக்கையைக் கைவிடுகிறது.எது எவ்வாறாயினும் இந்த உலகில் உயிர்வாழும் உரிமை பாம்புக்கும் உண்டே. அதனைக் கண்டவிடத்து அடிப்பதும் கொல்லுவதும் முறையற்ற செயற்பாடுகள். பாம்பு நம்மை நெருங்காமல் இருக்கவேண்டுமெனில் நமது சூழலை நாம்தான் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்புகள் என்றாலே பலருக்கும் அலர்ஜி அல்லது பயம் தான். அதனாலே எவை விஷப்பாம்பு எவை விஷமற்றவை என்பதை கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை. ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது? சில டிப்ஸ் இதோ.

என்ன செய்ய வேண்டும்?

1) சினிமாவில் பார்த்திருப்போம். கடித்த இடத்தின் அருகில் இறுக்கி கட்டுப் போட வேண்டும். ஆனால், ரொம்ப இறுக்கினால் விஷம் ஓரிடத்திலே தங்கி அந்த இடம் அழுகிப்போகும். எனவே லேசாக கட்டினால் போதும்.

2) கடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும். கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால், அதுதான் தேவை

3) கடிபட்டவரை நடக்க விடக்கூடாது. அவர் உடல் குலுங்கும்படி தூக்கிக்கொண்டு ஓடவும் கூடாது. இலகுவாகத்தான் கையாள வேண்டும்.

4) ரத்தம் வெளியே வந்தால் வர விடுங்கள். விஷம் ஏறிய ரத்தம் தான் முதலில் வெளிவரும். கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில், சோப்பு கொண்டு கழுவுங்கள்.

5) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது படுக்க வைத்து அழைத்துச் செல்லவும்

6) பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே அழைத்துப் பேசி விடவும். இல்லையேல், அங்கு போன பிறகு உதவ மருத்துவர்கள் இல்லை என தட்டிக்கழிப்பார்கள்.

7) கடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்னப் பாம்பு என்பதை அறியலாம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.

8) கடிப்பட்ட இடத்தில் வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அது தோலை மட்டுமே தீண்டியிருக்கும். விஷம் அதிகம் ஏறியிருக்கும் வாய்ப்புக் குறைவு. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்

9) எல்லா சமயங்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சாத்தியம் ஆகாது. அப்படிப்பட்ட நேரத்தில் கிராமங்களில் பின்பற்றப்படும் வைத்தியங்களை செய்து பார்க்கலாம். நோயாளிக்கு வாழைச் சாற்றை கொடுப்பது நமது கிராமங்களில் உண்டு. அது விஷ முறிவுக்கு நல்ல மருந்து என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள். அல்லது மஞ்சளை தீயில் காட்டி எரிந்துகொண்டிருக்கும் மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் வைத்து அழுத்துவார்கள். அப்படி செய்தாலும் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்து பார்ப்பது நல்லது.

10) நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். கண் இமை சுருங்கும். பேச்சு குழறும். கட்டு விரியன் கடித்தால் இதனுடம் வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும்.

என்ன செய்யக்கூடாது:

காயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் ரத்தத்தை எடுப்பார்கள்.

 ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.