தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராது சாதி சண்டை போட்டுக்கொண்டிருந்த எங்கள் ஊர் நண்பரின் பதிவை காலை பார்த்தேன். அதன் தொடர்ச்சியாக முக்கியமாக கருதி இதை எழுதுகிறேன்.
வரலாறு :
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் முன் ஒரே சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக அரபிக்கடலில் கலந்தது. அதை கிழக்கு நோக்கி திருப்பி மதுரை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயன்படுத்த கர்னல் பென்னி குக் அவர்களால் கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை.
பிரச்சனை :
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடி. ஆனால் அணை பாதுகாப்பாக இல்லை என கூறி கேரளா 136 அடியாக குறைத்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்தி தீர்ப்பு வழங்கியது. மீண்டும் கேரளா சட்டமன்றத்தில் 136 அடியாக சட்டமியற்றியது. நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் மீண்டும் 142 அடியாக உயர்த்தியது.
தற்போதைய நிலவரம் :
இப்போது கேரளாவில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியுள்ளது. இதை 138 அடிக்கு கீழ் குறைக்க வேண்டும் என கேரளா கோரிக்கை வைத்துள்ளது. முல்லை பெரியாறு நீர் குழாய்கள் மூலம்(படம்) தான் வைகையுடன் இணைக்கப்படுகிறது. எனவே தண்ணீரை திறந்தால் அது மீண்டும் கேரளாவிற்குள் செல்ல வாய்ப்பு அதிகம் என தமிழக அரசு மறுத்துள்ளது.
அரசியல் சூழ்ச்சி :
கேரளா தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா மையம். முல்லை பெரியாறு அணையின் அருகில் சட்டவிரோதமாக நிறைய ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த பண முதலைகள் அவர்கள் பாதுகாப்பிற்காக அணையின் நீர்மட்டத்தை குறைக்க சொல்கிறார்கள். (இதை தமிழக அரசும் கோர்ட்டில் சொல்லியிருந்தது). இது தவிர தற்போது 39 அணைகளை திறந்து மக்களை கொன்ற கேரள அரசும் அதை திசை திருப்ப முல்லை பெரியாறை பயன்படுத்துகிறது.
எதை இழப்போம்? :
முல்லை பெரியாறு ஐந்து மாவட்டங்களிலுள்ள கிட்டதட்ட 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கான பாசன நீரை தருகிறது. மதுரை மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் ஆறு கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரியல் மேம்படும். இன்று நாம் நீர்மட்டத்தை குறைத்தால் இதுவே நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு நிரந்தரமாக குறைக்கப்படும்.
சிந்திக்க :
இப்போதே முல்லை பெரியாறு நீர் முழுமையாக கிடைப்பதில்லை. வைகையில் மணல் குவாரிகளால் நீர் கடலை சென்று அடைவதும் தடை படுகிறது. அணையின் நீர்மட்டத்தை குறைக்க அனுமதிப்பது நம் வருங்கால சந்ததிக்கு செய்யும் துரோகமாகும். தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுர இளைஞர்களே.. இன்னும் எத்தனை நாளைக்கு உங்களுக்குள் சாதி சண்டை போட்டு, உங்கள் மண்ணை கருவேல மரம் தின்ன விட்டுவிட்டு வெளிநாட்டில் அடிமை வேலை பார்க்க போகிறீர்கள்?
உணருங்கள். நிலம் மட்டுமல்ல நீரும் நம் உரிமை !
முகநூல் பகிர்வு