பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. அதை அழிப்பதை பற்றியே..! திட்டுபவர்கள் தாராளமாய் திட்டலாம்..!

373

மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள். பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும்.

இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள். ஒரே ஒரு #நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.

காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள். ஒரே ஒரு #பெருமழை, காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர், `முன்னேற்றம்’, `வளர்ச்சி’ போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.

(ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி)
நிறுத்து அனைத்து அழிவு திட்டத்தையும் நிறுத்து.. நிறுத்தி நீ உன்னை காப்பாற்றிக்கொள் இல்லாவிடில் பூமி தன்னை காப்பாற்றிக்கொள்ள உன்னை கொல்லும்..

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்.

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.