நம் தாத்தா காலத்தில் கோடியில் ஒருவருக்கு இருந்தது புற்றுநோய். பிறகு, லட்சங்களில் ஒருவர் என்பதைத் தாண்டி, ஆயிரங்களை அசால்டாக ஓவர்டேக் செய்து விட்டது தற்போது.
நூற்றுக்கு ஒருவர் புற்றுநோயாளி ஆகும் நிலை வெகுதூரம் இல்லை என அச்சமூட்டுகின்றன ஆய்வுகள்.
எங்கோ ஒருவருக்கு எப்போதோ வந்த புற்றுநோய், இன்று மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறிப்போன காரணியைத் தேடிப்போனால், அது நாம் தினமும் உண்ணும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தொட்டுநிற்கிறது. ஆக, இது நமக்கு நாமே வைத்துக் கொண்டிருக்கும் ஆப்பு.
‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாகக்கொண்ட, நமது பண்டைய வேளாண்முறைகளைக் கைவிட்டு, அதிக விளைச்சல் என்ற இலக்குக்காக, நாம் ஒட்டுமொத்த சூழலையும் இழந்து நிற்கிறோம்.
பயன்பாட்டு சுழற்சி அடிப்படையிலான நமது வேளாண்முறை, ஆரோக்கியத்தை அள்ளித்தந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில், ரசாயனப் பயன்பாடு அதிகமான பிறகு, வரமே சாபமான கதையாக, மனித குலம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான விவசாயமே அழிவுக்கும் காரணமாக அமைந்துவிட்டது.
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தொடர் பயன்பாட்டால், பூச்சிகள் வீரியத்தன்மை பெற்றுவிட்டன. அதை சமாளிப்பதற்காக, தாறுமாறாக விஷத்தைத் தெளித்து, காய்கறிகளை விளைவிக்கிறார்கள். விளைவு, காய்கறிகள் மட்டுமல்லாது, மண்ணும் நீரும்கூட நஞ்சாக மாறிக்கிடக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தெளிவான விவசாயக் கொள்கை இல்லாததன் விளைவு, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட, பல பூச்சிக்கொல்லிகள் இன்றைக்கும் நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன.
பொதுவாக, காய்கறிகளில் பூச்சிக்கொல்லி தெளித்து, 23 நாட்கள் கழித்துத்தான், சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இன்றைக்கு அறுவடைக்கு முதல் நாள் வரை காய்கறிகள் மீது மருந்து தெளிக்கப்படுகிறது.
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற சில காய்கறிகள், அறுவடையான பிறகும் ரசாயனத்தில் நனைந்தே சந்தைக்கு வருகின்றன. பழங்களில், திராட்சை, காய்கறிகளில், முட்டைக் கோஸ், காலிஃப்ளவர், கத்தரி ஆகியவற்றில்தான் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படிப்பட்ட ரசாயனக் காய்கறிகளை உண்பதால், பாதிப்பு வருமா? நிச்சயம் வரும் என்கிறார் மதுரை ‘அப்போலோ மருத்துவமனை’ ‘சிறுநீரகவியல்’ தலைமை மருத்துவர் சௌந்தரபாண்டியன்.
– ‘புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள், இந்த ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும்தான். இதை ஏராளமான ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.
இப்போது நியோநிகோடினாய்ட் (Neonicotinoid) என்ற ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்து, காய்கள் மற்றும் பழங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது, மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. காய்கறி, பழங்களைச் சமைப்பதற்கு முன்பு கழுவினாலும், ஏற்கனவே உள்ளே சென்ற ரசாயனம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அல்சைமர், ஞாபகமறதி, குழந்தையின்மை போன்ற பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
நன்கு விளைய ரசாயன உரம், பூச்சிகள் தாக்குதலை சமாளிக்கப் பூச்சி மருந்து என்பதைத் தாண்டி, பழங்களைப் பழுக்கவைக்கவும் பதப்படுத்தவும்கூட அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகையக் காய்கறி பழங்களைத்தான் நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதனால்தான், நோயாளிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது