அழகு என்பது உணர்வை இனிக்க வைப்பது. காதல் என்பது அறிவை இனிக்க வைப்பது. காமம் என்பது உயிரை அல்லது எண்ணங்களை இனிக்க வைப்பது. அழகு, காதல், காமம் போன்ற இனிப்புகள் என்பது உணர்வுகள், அறிவு, எண்ணங்கள் போன்ற நாக்குகளை கட்டி இழுக்கும் இனிப்பு காந்தம் போன்றது.
இனிப்புக் கடைகளில் வித விதமான இனிப்புகள் விற்கப்படுகின்றன. அதற்காக, எப்போதும் விற்கும் எல்லா இனிப்புகளையும் நாம் மென்று தின்று கொண்டு இருப்பதில்லை. தேவைப் படும்போது, நம்மால் வாங்க முடியும்போது, நமக்குப் பிடித்த, நம்மால் வாங்க முடிகிற அந்த இனிப்புகளை மட்டும் தான் வாங்கி உண்ணுகிறோம்.
ஏனென்றால், அவைகளுக்கு ஒரு விலை இருக்கிறது. அதனால் எந்த இனிப்பை எவ்வளவு உண்டால் இப்போதைக்குப் போதும் என்று நமக்கு தெரிகிறது. அதே இனிப்புகள் இலவசமாக அல்லது அளவுக்குமீறி ஒருவருக்கு கிடைக்கும் என்றால், இனிப்புகள் சாப்பிடுவதை எப்படி கட்டுப்படுத்துவது என்கிற கேள்வி அவர் மனதில் எழுகிறது. அவரைப் போலவே எல்லோருக்கும் இனிப்புகள் இலவசமாகவோ அல்லது அளவுக்குமீறியோ கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் இனிப்புக் கடைக்கு அருகிலேயே இருப்பார் aகள் அல்லது இனிப்புக் கடையையே வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு இனிப்பு உண்ணமாட்டார்கள்.
அதேபோல், அழகு, காதல், காமம் போன்றவை இலவசமாக அல்லது அளவுக்குமீறி கிடைப்பவர்களுக்கு அல்லது தேடிப் போகிறவர்களுக்கு, இதைப் போன்ற கேள்விகள் மனதில் எழுகிறது. உலகத்தில் எல்லோருக்கும் இந்த கேள்வியாளரைப் போலவே அழகு, காதல், காமம் போன்றவை இலவசமாகவோ அல்லது அளவுக்குமீறி கிடைக்கிறது என்றோ, கிடைத்தாலும் அதிலேயெ மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றோ, அதனால் அளவுக்கு மீறிய காம உணர்வுகள் எல்லாருக்கும் உண்டாகிறது என்றோ, அவைகளை அடக்கும் தொழில்நுட்பம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் அடக்கிக் கொள்கிறார்கள் என்றோ, இந்த கேள்வியாளரைப் போன்றவர்கள் எண்ணுதல் பேதைமை.
எவரும் அவர் காணும் ஒவ்வொரு இன்பத்துக்கும், ஒரு விலையை கொடுக்க நேரிடுகிறது. அந்த விலையை யாரிடமும் கடன் வாங்காமல் அவர்களாலேயே கொடுக்க முடிபவர்களுக்கு அந்த இன்பம் இரட்டிப்பாகிறது. கடன் வாங்கி இன்பம் துய்த்துவிட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு துன்பங்கள் இரட்டிப்பாகிறது. ஒருவர் யாரிடமும் கடன் வாங்காமல் அடுத்தவரைவிட பல மடங்கு அதிக இன்பங்கள் துய்த்து மகிழ்வாக வாழலாம்.
அவரைப் பார்த்து ஒருவர் கடன் வாங்கி அதில் மிகச்சிறிய அளவே இன்பங்கள் துய்த்துவிட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதபோது துன்பங்கள் பல மடங்குகளாகிவிடுகின்றன. அதனால், துன்பங்கள் என்பது ஒருவர் காணும் இன்பங்களால் வருவதில்லை. ஒருவர் காணும் இன்பங்களுக்கு தகுந்த விலை கொடுக்க அவர் வாங்கும் கடன்களைப் பொருத்தே துன்பங்கள் வருகிறது. அந்த கடன்கள் பொருளாகவோ, நேரமாகவோ அல்லது உயிர் சக்தியாகவோ இருக்கலாம் என்பது என் கருத்து.
காமக் கிளர்ச்சி என்பது காமத்தை அளவுக்குமீறி பயன்படுத்துவதால் வரும் ஒரு வித இனிப்பு போதை போன்ற அடிமைத்தனம். ஒருவர் தன்னுடைய காம இச்சை உபயோகங்களை அவைகள் அளவுக்கு மீறும் போதெல்லாம் மாற்று எண்ணங்களால் (இனிப்புக்கு காரம் மாற்றாவது போல) கட்டுப்படுத்தினால் போதும் தன்னால் எதுவும் தானாகவே கட்டுக்குள் வந்துவிடும் என்பது என் கருத்து.
மனிதன், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்கிற நம்பிக்கை மட்டும் வேண்டும். அவ்வளவுதான். அந்த நம்பிக்கையை வேண்டுவோர் எல்லாருக்கும் இலவசமாக அளவுக்குமேறி கொடுக்க கடவுள் இருப்பதினால், இதில் வருத்தப்பட ஏதுமில்லை.