நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி சுற்றுசூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தண்ணீர், காற்று என இயற்கை பொருட்கள் கூட சூழல் பாதிப்பால் மாசடைகிறது.
மக்களிடையே விழிப்புணர்வு குறைவே இப்பிரச்னைக்கு ஒரு காரணமாக அமைகிறது. தடைச்செய்யப்பட்ட பாலிதீன் பைகள், டீ கப்புகள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.
நகர் புறங்களில் வாடிகால், கிராமங்களில் ரோட்டோர குப்பையுடன் கொட்டப்படுகிறது. இதை தடுக்கவேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
மறந்த வாழைஇலையில் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும். இலையில் சூடான உணவுபொருட்களை சாப்பிடும்போது இலையின் பச்சையம் உடலுக்கு நன்மை தரும் என சித்தமருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இன்று கிராம டீ கடைகளில் வடை, பஜ்ஜி, ஓட்டல்களில் உணவுபொருள்களை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து கொடுக்கின்றனர். சூடான உணவை பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சாப்பிடும்போது, அஜீரண கோளாறு, வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது
அரசு, தனியார் நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் கூட தடை பாலிதீன் பை, கப்புகளை பயன்படுத்துகின்றனர். இதை அருகே உள்ள வாறுகாலில் வீசுகின்றனர். இந்த பிளாஸ்டிக் குப்பை வாறுகாலில் மேடு உருவாக்கி கழிவு நீர் வெளியேறுவதை தடுக்கிறது. இதனால் துர்நாற்றம், சுகாதார கேடு, கொசு உற்பத்தி போன்ற பல பிரச்னைகளை மக்கள் சந்திக்கின்றனர். அரசு நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடை தடுத்து இவர்களே மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
மூச்சுத் திணறல்
நகர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் உடனே அகற்ற வாய்ப்பு உள்ளது. கிராம பகுதிகளில் துப்புரவு பணியாளர் இருப்பதில்லை. இவர்களால் கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க வாய்ப்பு இல்லை. பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு தடுக்க அதிகாரிகளும் இல்லை. இதனால் தான் கிராம பகுதி மெயின்ரோடு அருகே குப்பையை கொட்டுகின்றனர். இதில் தடை பிளாஸ்டிக் பை, கப்புகளும் அடங்கும். குப்பை சேர்ந்தவுடன் தீ வைக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் எரியும்போது
கரும்புகை ஏற்பட்டு சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுகிறது.அப்பகுதி குடியிருப்போர் கரும்புகை கலந்த காற்றை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கின்றனர்.
சுத்தமான காற்றுக்கு..
நெடுஞ்சாலை ரோடுகளில் வாகனங்களால் கரும்புகை, மண்துகள் அடங்கிய தூசிகளால் பாதிப்பு ஏற்படும். இதை குறைக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோடுகளில் அரளி செடி வளர்க்கப்படுகிறது.
இந்த செடி மற்றும் பூக்கள் காற்றில் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. இது போல் வீடுகளில் மாடி தோட்டம் அமைத்தால் சுத்தமாக காற்றை சுவாசிக்கலாம்.
இயற்கை மாற்றம், மழையின்மை, வெயிலின் பாதிப்பு உணர்ந்து பலரும் வீட்டு முன், வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நடுகின்றனர். இதற்கு வழி இல்லாதவர்கள் மாடி தோட்டம் அமைக்கின்றனர்.
இயற்கை உரம் தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டு ரசாயன கலப்பில்லாத உரத்தை பயன்படுத்தி சத்தான காய்கறி, பழங்களை பெறுகின்றனர். ராஜபாளையம் மலையடிவார பகுதியாக இருப்பதால் மாடியில் வலை விரித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து கேரட், முட்டைகோஸ் போன்றவையும் வளர்க்கலாம்.
மரம் வளர்ப்பு, பூச்செடி வளர்ப்பில் அதிக நேரம் ஒதுக்குங்கள் .” டிவி ‘சீரியல் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து செடி வளர்ப்பில் ஈடுபடுவதால், மனம் அமைதிபடும்.
மரம், செடி வளர்ப்பு என்பது நமது பண்பாடுடன் கலந்த விஷயம். செடிகள் காற்றில் ஆடும்போது நம்முடன் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும்.
பள்ளி செல்லும் மாணவிகளுக்கு செடிகளில் இருந்து பூப்பறித்து கொடுக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை கண்டு பூரிப்படையலாம் . இதன் மூலம் அந்த மாணவிகளுக்கும் செடி, மரம் வளர்க்கும் எண்ணத்தை மறைமுகமாக விதைக்கலாம்..!