தழிழக அரசின் கொழிக்கும் டாஸ்மாக்  மணற்கொள்ளை, ஆதாரத்துடன் ஊழல் அறிக்கை

360

தமிழகஅரசின் டாஸ்மாக் கொள்கை ; மணல் வியாபாரக் கொள்கை சட்டபூர்வமாகவும், நீதிமன்றங்களின் ஆசியோடும் நடைபெறுகின்றன. எனில், இதன் பெயர் சட்டத்தின் ஆட்சியா, அல்லது சட்டபூர்வ சீரழிவா?

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் நல்லசிவன் என்ற 17 வயதான பிளஸ் டூ மாணவன், மே 1 அன்று நள்ளிரவில் சங்கரன்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

தினேஷ் நல்லசிவன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த தனது தந்தை மாடசாமியை மீட்டெடுக்க, அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் தினேஷ்.

ரயில்வே மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த தினேஷின் சடலத்தை மீட்டபோது, அவனது சட்டைப் பையில் இருந்த கடிதத்தில், “தனது சாவாவது தன் தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தட்டும்” என எழுதியிருந்ததோடு, “குடிப்பழக்கத்தை நிறுத்த இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா? எனப் பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்” என்ற தனது ஆதங்கத்தையும் மனவேதனையையும் கொட்டியிருந்தான், அச்சிறுவன்.

ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன் – தினேஷ் எழுதிய கடிதம்.

மருத்துவராகும் கனவைக் கொண்டிருந்து தினேஷின் தற்கொலை அனுதாபத்தோடு பார்த்துவிட்டுக் கடந்துபோய்விடக் கூடிய விசயமல்ல. தினேஷின் தற்கொலை, குடிநோய் என்ற படுகுழிக்குள் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறதே, அச்சீரழிவிற்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் கலகம்.

மருத்துவராகும் கனவைக் கொண்டிருந்த அனிதாவின் தற்கொலையையும் அதே கனவைக் கொண்டிருந்த தினேஷின் தற்கொலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அனிதாவும், தினேஷும் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொண்டிருந்தாலும், அவையிரண்டுமே தமிழகத்தைக் கவ்வியிருக்கும் இரண்டு அபாயங்களை எதிர்த்து நடத்தப்பட்டவை என்பதை மறுக்கமுடியுமா? எனினும், அனிதாவின் மரணத்திற்குத் தீவிரமாக எதிர்வினையாற்றிய தமிழகம், தினேஷின் மரணத்தையடுத்து டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தவில்லை. அச்சமயத்தில் கனன்று கொண்டிருந்த காவிரி பிரச்சினை தினேஷின் மரணத்தை இரண்டாம்பட்சமாக்கிவிட்டது. இந்த துரதிருஷ்டம் எடப்பாடிக்கு அடித்த அதிருஷ்டம்.

தினேஷ் தற்கொலை செய்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே, அதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜெகதீஷ் துரை, நம்பியாற்றுப் பகுதியில் நடந்துவரும் மணல்கொள்ளையைத் தடுக்க முயன்றபொழுது, மணல் மாஃபியாக்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு ஆற்றுப் படுகையிலேயே படுகொலை செய்யப்பட்டார்.

தினேஷின் தற்கொலை அரசின் சாராயக் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரையின் கொலை அரசின் மணல் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரை அரசு ஊழியர் என்பதால், அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கி முதலைக் கண்ணீர் வடித்திருக்கும் எடப்பாடி அரசு, மாணவன் தினேஷின் மரணத்திற்கு அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. அதேசமயம், தமிழகத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சினைகளில் – குடிநோய், மணல் கொள்ளை – காயத்தில் உப்புத்தாளைப் போட்டுத் தேய்க்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.

* * *

2015, 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் வீச்சாக எழுந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க முயன்று தோற்றுப் போன ஜெயா, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடித்த அவர், 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நாடகத்தை அரங்கேற்றினார். மூடப்பட்ட அந்தக் கடைகள் அனைத்தும் கல்லா கட்டுவதில் தேறாத கடைகள் என்பது அவர் கையெழுத்துப் போட்ட மறுநிமிடமே அம்பலமானது.

ஜெயாவும் செத்து, சசிகலாவும் ஜெயிலுக்குப் போன பிறகு, முதலில் தினகரன் தயவிலும், பின்னர் பா.ஜ.க.வின் தயவிலும் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தன் பங்குக்கு மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவிருப்பதாக அறிவித்தார். இப்படியாக 1,000 கடைகளை மூடிவிட்டதாக அ.தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், டாஸ்மாக் கொள்முதலும் குறையவில்லை, அதன் மூலம் அரசிற்குக் கிடைக்கும் வருமானமும் குறையவில்லை என்ற புதிரைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தின.

இந்தப் புதிருக்கான விடை எளிதானது. மற்ற டாஸ்மாக் கடைகளின் விற்பனை இலக்கைக் கூட்டியதன் மூலம் டாஸ்மாக் வருமானம் சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

இந்தச் சமயத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையொட்டி அமைந்துள்ள மதுபானக் கடைகளையும், பார்களையும் ஏப்ரல் 1, 2017 முதல் மூடிவிட வேண்டும் என உத்தரவு போட்டது, உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக ஏறத்தாழ 2,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது அ.தி.மு.க. அரசு. ஆனாலும், நெடுஞ்சாலையைப் பார்த்து இருந்த கடைகளின் முன்புற வாசல் கதவுகளை மூடிவிட்டு, புறவாசல் வழியாக விற்பனையை நடத்தி, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பெப்பே காட்டியது தமிழக அரசு.

இதனிடையே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், ஐந்து நட்சத்திர விடுதி அதிபர்களும் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றக் கோரி மேல்முறையீடு செய்தனர். குறிப்பாக, யூனியன் பிரதேசமான சண்டிகர் நகர நிர்வாகம், தனது நகர எல்லைக்குள் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையும் உள்ளாட்சி சாலைகளாகப் பெயர் மாற்றி, அச்சாலைகளையொட்டி இயங்கிவந்த மதுபானக் கடைகளையும், விடுதிகளையும் மூடாமல் தொடர்ந்து நடத்தத் தொடங்கியது.

அஞ்சு சுத்து சுத்திட்டு வா… 501 வது மீட்டருல வந்துரும் பாரு…

நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும், கடைகள் குறித்த விளம்பரப் பலகைகள்கூட நெடுஞ்சாலைகளில் இருக்கக் கூடாதென்றும் நீதிபதிகள் கறாராக உத்தரவிட்டிருந்ததை, மாநில ஆட்சியாளர்கள் காமெடி பீஸாக மாற்றினார்கள். நெடுஞ்சாலைகளையொட்டியிருந்த மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தாமலேயே, கடைகளுக்குச் செல்லும் பாதையைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல மாற்றியமைத்துக் கல்லா கட்டினார்கள்.

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது உத்தரவின் மீது சாணியை அடித்துவிட்டதைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், “நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர பார்களை மூடியதால் சுற்றுலாத் துறை படுத்துவிட்டது” என்ற பொருளாதாரக் காரணியைப் பிடித்துக்கொண்டு, சண்டிகர் நகர நிர்வாகம் செய்த மாற்றத்திற்கு அனுமதி அளித்தது.

சண்டிகர் நகர நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் சலுகை அளித்த மறுநிமிடமே, நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி, அச்சாலைகளில் இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயன்றது எடப்பாடி அரசு. இந்த இழிமுயற்சிக்கு எதிராக பா.ம.க. தொடுத்த வழக்கில், நெடுஞ்சாலைகளைப் பெயர் மாற்றம் செய்வதற்குத் தடை விதித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தத் தடை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே, சண்டிகருக்கு மட்டும் அளிக்கப்பட்ட தளர்வைத் தேசியமயமாக்கி, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே சவக்குழியைத் தோண்டியது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவைப் பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதி எல்லைகளின் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில் 1,700 கடைகளைத் திறப்பதற்கான ஆணையை வெளியிட்டது. நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை எடப்பாடி அரசு கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிக்கவில்லை.

இப்புதிய கடைகளைத் திறப்பதற்கு எதிராக பா.ம.க. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசால் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கில், ஒருபுறம் அந்த 1,700 கடைகளைத் திறப்பதற்குத் தடைபோட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றினால், கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்ற சலுகையைத் தமிழக அரசிற்கு வழங்கியது, உயர் நீதிமன்றம்.

ஆனால், எடப்பாடி அரசோ நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவது என்ற சாதாரண நிர்வாக நடவடிக்கையை எடுக்கக்கூடத் தயாராக இல்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியாக, அதனை ரத்துச் செய்யக் கோரும் மேல்முறையீட்டு வழக்கை திங்கள்கிழமையே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீட், காவிரி விவகாரங்களில் காணப்படாத வேகமும் அக்கறையும் டாஸ்மாக் விவகாரத்தில் பொங்கி வழிந்தது.

அம்மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தடையுத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி மதுபானக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்திருக்கும் உத்தரவுப்படி அறிவிக்கை வெளியிட்டுவிட்டு, கடைகளைத் திறந்து கொள்ளலாம்” என்றவாறு நயவஞ்சகமான தீர்ப்பை அளித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்.

இத்தீர்ப்பினையடுத்து, நெடுஞ்சாலை பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கும், ஏற்கெனவே இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளின் உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஏதுவாக புதிய அரசாணையொன்றை கடந்த மே 21 அன்று – கவனிக்க தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முதல் நாள் – வெளியிட்டு, அதனை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது, தமிழக அரசு.

“எங்களது கருத்தைக் கேட்காமல் இந்த அரசாணையை அங்கீகரிக்கக் கூடாது” என்று பா.ம.க.வின் சமூக நீதிப் பேரவை உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆனால், இந்த வாதத்தின் பின்னுள்ள நியாயத்தைக் காண மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்ஹா அமர்வு, “தமிழக அரசின் அரசாணை, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தளர்த்தப்பட்ட தீர்ப்பின்படி அமைந்திருப்பதாக”க் கூறி, தமிழக அரசின் குடிகெடுக்கும் அரசாணைக்கு உடனடியாக அங்கீகாரம் அளித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹா.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம், “குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதே தடுப்பதுதானேயொழிய, உரிமம் பெற்று இயங்கும் மதுபானக் கடைகளின் வியாபாரத்தை ஊத்தி மூடுவது அல்ல” என விளக்கமளித்து, சாராய வியாபாரிகளுக்கான நீதியை நிலைநாட்டினர். இனி நீதிமன்றங்களை நம்பி, டாஸ்மாக் கடைகளை மூடும் சட்டபூர்வ போராட்டங்களை நடத்த முடியாது என்பதுதான் நீதிபதிகள் அளித்திருக்கும் விளக்கத்தின் பொருள்.

ஏப்ரல் 2017-க்கு முன்பாகத் தமிழகத்தில் ஏறத்தாழ 6,200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. “நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் நீர்த்துப் போன தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருந்தால்கூட, தமிழகத்தில் 2,502 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்க முடியும். ஆனால், தற்பொழுது தமிழகத்தில் 4,000 கடைகள் நடந்துவருவதாக”க் கூறுகிறது, பா.ம.க. “தமிழகத்தில் தற்பொழுது 3,000 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கிவருவதாக”க் கூறுகிறார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை செல்வராஜ். எண்ணிக்கை நாலாயிரமோ, மூவாயிரமோ, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள சலுகையினைப் பயன்படுத்திக் கொண்டு எடப்பாடி அரசு புதிதாகத் திறக்க முயன்றுவரும் 1,700 கடைகளையும் சேர்த்துக் கொண்டால், “படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவது” என்ற அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி ஒரு மாபெரும் மோசடி என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.