மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் “என் காலில் விழுந்த மகராசன்,” என மதுரை களஞ்சியம் சின்னப்பிள்ளை கண்ணீருடன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் புல்லுச்சேரியை சேர்ந்தவர் சின்னபிள்ளை. களஞ்சியம் தொண்டு நிறுவனம் மூலம் கிராம பெண்களிடம் சேமிக்கும் பழக்கம், சிறுசேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்காக மத்திய அரசு 2001ல் ‘சக்தி புரஸ்கார்’ விருது வழங்கியது.சின்னப்பிள்ளைக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விருது வழங்கி, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
பிரதமரின் இந்த எளிமையான செயல் நாட்டு மக்களை வியக்கவைத்தது.வாஜ்பாய் மறைவு குறித்து சின்னப்பிள்ளை கூறியதாவது:அவர் இறந்த தகவல் கேட்டதும், என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தினேன்.எனக்கு விருது வழங்கியதும் என் காலில் விழுந்து, என்னை உலகிற்கே பெருமைக்குரிய பெண்ணாக மாற்றிவிட்டார்.
ஒரு நாட்டின் தலைவராக இருந்தும், என் காலில் விழுந்த மகராசனை எண்ணி வியப்பில் கண்ணீர் சிந்தினேன். அங்கிருந்த அதிகாரிகள் சிலர், என்னை ஒரு பெண் தெய்வமாக எண்ணித்தான் அவர் என் காலில் விழுந்ததாக தெரிவித்தனர்
விருது பெற்றதற்கு பின் அடிக்கடி அவருக்கு கடிதம் எழுதிநலம் விசாரித்துள்ளேன். அவர் போன்ற தலைவர்கள் இந்தியாவிற்கு கிடைத்தது பெருமை, என்றார்.