‘ஒருத்தரும் வரேல’ பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
‘கக்கூஸ்’ பார்த்த போதே பிரமிக்க வைத்தது படமாக்கலின் கூர்மை; சொல்லப்பட்ட விஷயங்களிலும் அதை முன்வைத்த விதத்திலும்.
எந்த மக்களுடைய கதையைச் சொல்லப் பயணப்பட்டாரோ அவர்களைப் பேச விட்டிருக்கிறார். வஞ்சிக்கப் பட்ட அந்த மக்கள் நேரடியாக நமக்குச் சொல்கிறார்கள் நடந்த உண்மை என்னவென்று.
அடி வயிற்றீல் சொரேர் என்கிறது. அரசாங்கம் இப்படியும் வஞ்சிக்குமா சொந்த மக்களை. அதானே..யார் சொந்தம் என்கிற கேள்வி பிறக்கிறது.
புயல் அறிவிப்பு, உரிய நேரத்தில் தரப்படவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பின்பு, நவீனமுறையில் புயல் வரத்தைக் கண்டறிய உபகரணங்கள் வாங்கக் கோடிக் கணக்கில் உலக வங்கியிலிருந்து நிதி பெறப்பட்டும் முறையாகப் பயன்படுத்தப் படவில்லை.
மீனவர்களுக்கு ஆபத்து நேரத்தில், நேரடியாக இஸ்ரோவுக்கே தகவல் அனுப்பும்படியாகக் கருவிகள் வழங்கப் பட்டிருந்தனவாம், கடலுக்குள் தத்தளிக்கையில் அவற்றை நாட்கணக்கில் அழுத்தியும் ஒரு காக்கா குருவி கூட வரவில்லை.
புயல் முடிந்து பத்து மணி நேரம் கழித்து சில ஹெலிகாப்டர்களோ, கப்பல்களோ வந்திருந்தால் கூட அத்தனை பேரையும் காப்பாற்றி இருக்கலாம்.
10 டிசம்பர் வரை பலர் உயிருடன் போராடிப் பின் இறந்திருக்கிறார்கள்.
உயிர் பிழைத்தவர்கள், “நாங்கள் பிணமாய்த் தான் வாழ்கிறோம்” கூட வந்தவர்களைச் சாகக் கொடுத்த வலி எங்கள் வாழ்நாளெல்லாம் வதைக்கும்.
நிர்மலா சீத்தாராமனோ, நேவி போயிருக்கு ஹெலிகாப்டர் போயிருக்கு என்று ஒரு பக்கம் கூவிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த பிரேமில், அத்தனையும் பொய். அண்ணாந்து பார்த்தால் கழுகுகள் தவிர வேறெதுவும் பறக்கவில்லை என்கிறார்கள், மீனவர்கள்.
“எங்களைக் காப்பாற்றியது கடற்படையோ ஹெலிகாப்டர்களோ இல்லை, ஆயில்கேன்களே. பலமீட்டர் தூரம் வரை எங்கள் ஆயில்கேன்கள் படர்ந்து கிடந்தன கடலில் அதைப் பிடித்துக் கொண்டே தான் கரையொதுங்கினோம். அவை கூடவா கண்ணில் படவில்லை? கண்களை மூடிக் கொண்டா தேடினார்க?” வேதனையில் வெளிப்படும் கைத்த சிரிப்பு நம் மனதைத் தைக்கிறது.
ஆசியாவிலேயே ஆழ்கடல் சுறா மீன்பிடியில் சிறந்து விளங்கி, வளமபொருளாதாரத்திலும், கால்பந்து விளையாட்டிலும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்திருக்கும் தூத்தூர் கிராம மக்கள் பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள்.
வன்மத்தையும் வெறுப்பையுமே அடையாளமாய்க் கொண்டு நிலவும் அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலை தான் என்று நம்புவதற்குப் போதுமான சாட்சிகள் நிறைந்திருக்கிறது.
பாருங்கள்…மனதைத் திடப்படுத்திக் கொண்டு கண்டிப்பாகப் பாருங்கள்.
கொடுமையாய் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறு நீதி அது தான்.
தோழர் Deepa Lakshmi அவர்களின் பதிவு.
எங்களுக்கும் வாழ்த்தவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எழுத்துவடிவம் கொடுக்கமுடியவில்லை ஆகையால் வாழ்த்தப்பட்ட வாழ்த்தை பகிர்கிறோம்..!