நடிகர் விஜய் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பல முறை அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று கூறியும் அவர் கேட்கவில்லை என்று, தாயாரும், சந்திரசேகரின் மனைவியுமான ஷோபனா கூறியுள்ளார்.பிரபலதிரைப்பட நடிகரான விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற அதற்காக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்துள்ளதாக நேற்று ஆதாரத்துடன் கூடிய தகவல் வெளியானது.அதுமட்டுமின்றி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.முதலில் இது வதந்தி என கூறப்பட்டாலும், அதன் பின் விஜய்யின் தந்தை தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் பெயரில் கட்சியை பதிவு செய்தது உண்மை தான், இதற்கும் விஜய்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.இதையடுத்து நடிக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தந்தை துவங்கிய அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.ஏ.சி துவங்கிய அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்த விஜய்யின் தாய் சோபா, அசோசியேஷன் துவங்குவதற்காகவே தான் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டதாகவும், கட்சி துவங்க கேட்டபோது கையெழுத்து போட மறுத்து விட்டதாகவும், பல முறை அரசியல் பற்றி பேசவேண்டாம் என விஜய் தன்னுடைய தந்தையிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், பொருளாளர் என்கிற பதவியில் இருந்து தான் விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்.மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.