சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதத்தை ரொக்கமாக வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இனி மின்னணு முறையில் மட்டுமே அபராதம் செலுத்த முடியும்.
சென்னை நகரின் பரபரப்பான சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அருகே விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் காவலர்கள் அபராதம் வசூலிப்பதை சாதாரணமாக பார்க்க முடியும்.
இங்கு அபராதம் வசூலிக்கப்படும் அளவுக்கு கையூட்டும் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும் வாடிக்கை.
பெரும்பாலான சென்னைவாசிகளுக்கு கையூட்டு கொடுத்த அனுபவம் இங்கு கிடைத்திருக்கும். இதில் வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவலர்கள் மறித்து பிடிக்கும் போது சில அசம்பாவிதகங்ளும் நடைபெற்றுள்ளன.
அத்தகைய சம்பவங்களில் போக்குவரத்து காவலர்களும் – பொதுமக்களும் வார்த்தைகளால் மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது. சில இடங்களில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதைத் தடுக்க மின்னணு முறையில் அபராதம் செலுத்தும் புதிய முறையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை நகரில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி 1347 பேர் உயிரிழந்துள்ளனர். கையூட்டு மற்றும் மோதலை தடுக்கவே புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் போக்குவரத்து விதிகளை அனைவரும் முறையாக கடைபிடிப்பதன் மூலமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதே நிதர்சனம்.
நன்றி