எட்டுவழிச்சாலை பித்தலாட்டங்கள்!
சென்னை வண்டலூர் முதல், சேலம் அரியானூர் வரை அமையவுள்ள இந்தச் சாலை 277 கி.மீ. தொலைவு உள்ளதென்றும், இந்தச் சாலை வந்தால் மூன்று மணி நேரத்தில் சேலம் செல்ல முடியும் என்றும் கூறித்தான் இயற்கையை அழிக்க அரசுகள் கிளம்பியுள்ளன. இதற்கான மாற்று வழியே இல்லையா? உண்டு…
தற்போது, உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சாலையில் இதே இடங்களுக்கு இடையிலான தொலைவு 329 கி.மீ. ஆகும். உளுந்தூர்பேட்டை பைபாஸ் முதல் சேலம் வரையிலான தொலைவு மட்டும் இதில் 135 கி.மீ. இந்தத் தொலைவை நான் ஒரு மணி பத்து நிமிடங்களில் கடந்திருக்கிறேன். இத்தனைக்கும் இந்தச் சாலையில் எட்டு இடங்களில் புறவழிச்சாலைகள் இருவழிப்பாதையாக உள்ளன. இவற்றையும் நான்கு வழிச் சாலையாக மாற்றினாலே போதும், அரியானூர் வரையிலான 148 கிமீ தூரத்தை அதே ஒன்றேகால் மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
அடுத்து வண்டலூர் முதல் உளுந்தூர்பேட்டை வரையிலான சாலைதான் இங்கே பிரச்சினை. இந்தச் சாலையை எட்டு வழியாக மாற்றினாலே போதும். தற்போது சுமார் மூன்றரை மணி நேரமாக இருக்கும் பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறையும். அதே நேரம், சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதே பயண நேர நீட்டிப்புக்குக் காரணமாகும். எனவே சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் மாற்று வழிகளைச் செயல்படுத்தினால் இந்த 181 கிமீ தொலைவை வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் கடக்க முடியும்.
எனவே ஏற்கனவே உள்ள வழித்தடத்திலேயே அவர்கள் சொல்லும் அதே கணக்கில் மூன்று மணி நேரத்தில் சேலம் சென்னை பயணம் மேற்கொள்ள முடியும். அதே நேரம் உளுந்தூர்பேட்டை வரையிலான சாலையை எட்டு வழியாக மாற்றினால் தென் மாவட்டங்களும் பயன்பெறும்.
ஆனால், தற்போது மலைகளை, மரங்களை, வேளாண் நிலங்களை அழித்து போட முற்படும் எட்டுவழிச் சாலையில் எதிர்காலத்தில் இயற்கையைச் சுரண்டிச் செல்லும் ராட்சச கனரக வண்டிகள் மட்டுமே பயணிக்கும் என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். புதிய திட்டத்தில்தான் கமிசனும் அதிகம். அதற்காகத்தானே இந்த பத்தாயிரம் கோடி.
எளிதான ஒன்றை செய்யலமே..?