சத்தியமங்கலம் அருகே அரசு திட்டத்தில் கட்டித்தரப்பட்ட கழிப்பறைகளின் அவல நிலைகுறித்து செய்தி வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தில் இடம் பெறும் காட்சியைப் போன்றே ஈரோடு மாவட்டத்தில் கழிவறை கட்டும் திட்டத்தில் நிகழ்ந்த மோசடி குறித்து செய்தி வெளியிடப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி, வனப்பகுதியில் அமைந்துள்ளது சுஜில்குட்டை கிராமம்.
இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 130 வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டித் தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பல அடுக்கு ஊழல்களைத் தாண்டி பொதுமக்களை திட்டம் சென்றடைந்த போது தரமற்ற கட்டுமானமே மிஞ்சியது.
எந்நேரமும் இடிந்துவிடும் கட்டுமானம், பெயரளவிற்கான கதவுகள், பயன்படுத்தவே முடியாத செப்டிக் டேங்க் குழிகள் என முறைகேடுகளின் மொத்தவிளைவாக காட்சியளித்தன இந்த கழிப்பறைகள்.
இந்த அவல நிலை குறித்த செய்தி ஒளிபரப்பப்பட்ட நிலையில், 24 மணி நேரத்திற்குள்ளாக சுஜில் குட்டை கிராமத்தில் நிலைமை மாறி வருகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கிராமத்தை நேரில் பார்வையிட்டு, மோசமான கட்டுமானங்களை சீரமைத்து வருகின்றனர்..
சிமெண்ட் சிலாப்புகளால் அமைக்கப்பட்ட ஒப்பனை செப்டிக் டேங்குகளை அகற்றிவிட்டு,
புதிதாக புதைப்பதற்கான சிமெண்ட் வளையங்கள் லாரிகளில் கிராமத்தைத் தேடி வந்து இறங்கியுள்ளன.
கழிப்பறைகள் சீரமைக்கப்படுவது மகிழ்ச்சயளித்தாலும் தவறுகளை மறைப்பதற்கான முயற்சியாக அல்லாமல்,
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்…செய்தி: பாலிமர்