இளநீர் ரசம், கேட்கவே வியப்பாக இருக்கா..? வெறுமென இளநீராக குடித்திருந்த தமிழர்கள், காலப்போக்கில் அதை பலவிதமாக உணவுகளில் சேர்த்து உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இளநீர் ரசம்
நாம் அனைவரும் மிகவும் விரும்பி பருகும் இயற்கை பானம் இளநீர். உடல் சூட்டை தணிப்பதற்கு இதைவிட சிறந்த இயற்கையான ஓர் கடவுளின் படைப்பு கிடையாது.
வெறுமென இளநீராக குடித்திருந்த தமிழர்கள், காலப்போக்கில் அதை பலவிதமாக உணவுகளில் சேர்த்து உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இளநீரில் பாயசம் செய்வது, மற்ற பழங்களுடன் சேர்த்து பழச்சாறு செய்வது என்று நிறைய வகைகள் வந்துவிட்டது.
அந்த வகையில் இன்று உங்களுக்கு மிகவும் சுவையான சுலபமாக செய்யக்கூடிய இளநீர் ரசம் எப்படி செய்வது என்று கீழே எழுத்து மூலம் கொடுத்துள்ளேன்
தேவையான பொருட்கள் :
இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
கறிவேப்பிலை – 8 இலை
உப்பு – தேவைக்கேற்ப
புளி – மீடியம் நெல்லிக்காயளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய் வழுக்கை
செய்முறை :-
இளநீரை தனியாக பில்டர் பண்ணி வைக்கவும்.
அதில் உள்ள வழுக்கையை கால்வாசி அரைக்கும்போது போடவும். மீதியை நறுக்கி தனியே வைக்கவும்.
வெட்டி வைத்த தக்காளி 3 ஸ்பூன் வழுக்கை புளி மூன்றையும் மிக்ஸியில் லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் வேகவைத்த துவரம் பருப்பைக் கால் டம்ளர் தண்ணீர் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் அரைத்த பேஸ்ட்டைப் போட்டு தண்ணீர் கொஞ்சம் விட்டு கொதிக்கவிடவும். மஞ்சப்பொடி, உப்பு, மிளகு சீரகப் பொடி, சாம்பார் பொடி பாதி நறுக்கிய வழுக்கையை போட்டு நான்கு நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு கரைத்து வைத்துள்ள பருப்புதண்ணீர், இளநீர் சேர்த்து, உப்பு உரப்பு சரிபார்த்து, அடுப்பை சிம்மில் வைத்து, நுரைத்தவுடன் இறக்கவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு கடுகு ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து ரசத்தில் கொட்டவும்.
கொத்தமல்லி, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இந்த ரசத்திற்கு போடக்கூடாது.
சுவையான சத்தான இளநீர் ரசம் ரெடி……