பழமையான மாட்டுச் சந்தை துவக்கம்
மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காளைகள்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மாட்டுச் சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.
திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஓலப்பாளையத்தை அடுத்த கண்ணபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது.
கண்ணபுரம் மாரியம்மன் கோயில் தேர், பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 15 நாள் நடைபெறும்.
இந்தத் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பெரிய மாட்டுச் சந்தையான இங்கு, 15 ஆயிரம் மாடுகள் வரை விற்பனைக்குக் கொண்டு வரப்படும்.
பாரம்பரியமிக்க காங்கயம் காளைகள், மாடுகள், ஜல்லிக்கட்டுக் காளைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
1,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று ஆவணங்களில் இந்தச் சந்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தை அமைந்துள்ள திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை, 2,000 ஆண்டுகள் பழமையான ராஜகேசரிப் பெருவழி என அழைக்கப்படுகிறது.
இதில், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்தையில், தற்போது பல்வேறு ரக குதிரைகள், ஆடு வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மே 3-ஆம் தேதி வரை இந்தச் சந்தை நடைபெற உள்ளது.
மாடு ஒன்றுக்கு சந்தை நுழைவுக் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்குவதற்கு பலர் இங்கு வந்துள்ளனர்.