ராஜராஜனின் சமாதி இருக்கும் இடத்தின் உரிமையாளர் பக்கிரிசாமியைச் சந்தித்தோம்.
சந்திரனில் முகம் பார்க்கும் தஞ்சை கோபுரம்
கோபுரத்தை அமைத்தவரோ குப்பையின் ஓரம்…’
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கலை இலக்கிய இரவு மேடைகளில்… நவகவியின் இந்த வரிகள் ஓங்கி ஒலிக்கும்.
செம்மொழி மாநாட்டில் ராஜராஜ சோழனைப் பற்றி ‘நம் பாட்டன் பூட்டன்’ என்றெல்லாம் கம்பீரமாக பலரும் முழங்கிய நேரத்தில்… நவகவியின் இந்த வரிகளை மேலும் உண்மைப்படுத்துவது போலவே புறக்கணிக்கப்பட்டு கிடக்கிறார் மாமன்னன் ராஜராஜன்.
ஆமாம்.. கடல் கடந்து பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தமிழ் மன்னன் ராஜராஜசோழன் அடக்கம் செய்யப்பட்ட சமாதி அலங்கோலமாய் அனாதையாய் கிடக்கிறது.
கடல் வழியே படையெடுத்துச் சென்று இந்தோனேசிஷியா, மலேசியா, ஜப்பான், இலங்கை ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளை வென்ற ராஜராஜசோழனின் சமாதி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உடையாளூரில் பக்கிரிசாமி என்பவருக்கு சொந்தமான(!) இடத்தில் இருக்கிறது. போருக்குத் தேவையான உடைவாள் தயாரிக்கப்பட்ட தொழிற்கூடம் இங்கிருந்ததால் உடையாளூர் என்ற பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
கும்பகோணத்தை அடுத்த பழையாறு என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ வம்ச வழிவந்த ராஜராஜ சோழன் 17.01.1014-ம் தேதி இறந்தார். அவருக்கு 06.01.1015-ல் பிண்டமளித்து எட்டு பொற்பூக்களை கேந்திரபால தேவருக்கு திருவடி சாத்தி அவரது மகன் ராஜேந்திர சோழன் வழிபாடு செய்தார் என்பதை திருவலஞ்சுழி கோயிலில் உள்ள கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. ராஜராஜனின் சமாதி இருக்கும் இடத்தின் உரிமையாளர் பக்கிரிசாமியைச் சந்தித்தோம்.
‘‘மூன்று தலைமுறையாக இந்த இடத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இங்குதான் மாமன்னன் ராஜராஜசோழன் சமாதி இருக்கிறது. இதனை எல்லா மக்களும் வந்து தரிசிக்கும் வகையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல. இங்கு வந்து போகும் பல அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள் எல்லோருமே சொல்கிறார்கள். யார் யாருக்கோ மணிமண்டபம் அமைத்த அரசியல்வாதிகள் இதனையும் செய்ய வேண்டும்’’ என்றார்.