பிரபல திரைப்பட நடிகரான சூரி தரப்பு நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற டிஜிபியும், நடிகர் விஷ்னு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா நில மோசடியில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, சென்னை காவல்துறையில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், கடந்த 2015-ஆம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் வீரதீர சூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அதன் இணை தயாரிப்பாளராக தமிழக காவல்துறையில் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா இருந்தார்.அந்த திரைப்படத்தில் ரமேஷ் குடவாலாவின் மகன் நடிகா் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தார். இந்தத் திரைப்படத்துக்கு எனக்கு சம்பளமாக 40 லட்சம் ரூபாய் பேசப்பட்டது.
இந்நிலையில் திடீரென படத் தயாரிப்பு நிறுவனப் பெயரை மாற்றி படத்தின் பெயரையும் மாற்றி ஷூட்டிங் நடந்தது. இதில் எனக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை.இந்நிலையில் சென்னையில் இடம் வாங்க நான் விருப்பப்பட்டதை அறிந்த தயாரிப்பாளா் அன்புவேல் ராஜன், இணை தயாரிப்பாளா் ரமேஷ் குடவாலா ஆகியோர் சிறுசேரியில் ஒரு இடத்தைக் காட்டினா்.
அந்த இடம் எனக்கு பிடித்திருந்ததால், அதை நான் வாங்க முடிவு செய்தேன். இதனால் அவா்கள் தயாரித்த திரைப்படத்தில் எனக்கு வழங்கப்படாமல் இருந்த சம்பளத்தை முன் பணமாக கழித்தனா்.பின்னா் சிறுசேரியில் உள்ள இடத்தை வாங்குவதற்கு அன்புவேல் ராஜனிடம் பல தவணையாக ரூ.3.15 கோடி வரை கொடுத்தேன்.
அதன் பிறகு விசாரித்ததில் அந்த இடத்திற்கு சரியான பாதை இல்லை. அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதால் பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அதன்படி ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து மீதமுள்ள தொகை ரூ. 2 கோடி 69 லட்சத்து 92 ஆயிரத்து 500 கொடுக்காமல் ஏமாற்றி வந்தனா்
இது குறித்துக் கேட்டபோது இருவரும் என்னை மிரட்டினா். எனவே என்னிடம் மோசடி செய்த ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சூரி தரப்பில் ரமேஷ் குடவாலா நில மோசடியில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், ஆதாரங்களை பொலிசாரிடம் ஒப்படைக்க சூரி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதனால் இந்த வழக்கு விசாரணை இப்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆனால், விஷ்னு விஷாலோ என் அப்பா அப்படி செயலில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார். சூரி தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறுவதால், இது திரையுலகில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.