கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்க உலகில் முதல் நாடாக பிரித்தானியா அனுமதி அளித்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பில் இளைஞர் ஒருவர் தமது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி பிரித்தானியாவில் முதல் கொரோனா டோஸ் வழங்கப்பட உள்ளது.அமெரிக்காவில் டிசம்பர் 18 முதல் தடுப்பூசி வழங்க முடிவாகி உள்ளது என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுவரை அமெரிக்க நிறுவனங்களான பைஸர் மற்றும் மாடர்னா மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகளே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது.
உலகில் முதல் நாடாக தடுப்பூசி டோஸ்களை பொதுமக்களுக்கு அளிக்க பிரித்தானியா அனுமதி அளித்துள்ள நிலையில்,தற்போது இரண்டாவதாக இஸ்லாமிய நாடான பஹரைன் அனுமதி அளித்துள்ளது.இதுவரை இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் எவையும் திகதியை அறிவிக்கவில்லை.
இதனிடையே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உடம்பில் என்ன மாறுதல் ஏற்படும் என்பது தொடர்பில், இளைஞர் ஒருவர் தமது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.மாடர்னா மருந்து நிறுவன கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் 24 வயதான இவர் பங்கேற்றுள்ளார்.
பைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் தடுப்பூசிகளை ஒவ்வொருவரும் இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காய்ச்சலுக்கான டோஸ் எடுத்துக்கொள்வது போன்றே முதலில் தமக்கு ஒரு உணர்வு ஏற்பட்டதாக கூறும் அந்த இளைஞர், முதலில் ஒரு முள் குத்தியது போன்று இருந்தது எனவும், பின்னர் உடல் முழுவதும் அது வியாபித்தது என்றார்.
மாலையில் தோள்பட்டை உயரத்திற்கு மேலே கையைத் தூக்கும் போது அவருக்கு வலி ஏற்பட்டது. ஆனால் அதனால் பக்கவிளைவுகள் ஏதும் தமக்கு ஏற்படவில்லை என கூறிய அந்த இளைஞர்,இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பின்னர் அதன் தாக்கம் தெரிய வந்தது என்றார்.
மருத்துவமனையில் வைத்து தமக்கு பெரிதாக ஏதும் தெரியவில்லை என குறிப்பிட்ட அவர், வீட்டுக்கு திரும்பியதும், நிலைமை மிக மோசமடைந்தது என்றார்.மாலையில் லேசான காய்ச்சல் கண்டது என்றவர், உடல் முழுவதும் வலியும், நடுக்கமும் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.மட்டுமின்றி தம்மால் நகரவே முடியாத அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது என்றார். ஆனால் அந்த இரவு முடிந்து காலையில் எழுந்ததும் உடல் வலியும் காய்ச்சலும் குறைந்திருந்தது என்றார்.
இது சரியான அறிகுறி என குறிப்பிட்ட மருத்துவர் ஒருவர், நமது உடலுடன் கொரோனா தடுப்பூசி ஒத்துழைக்கிறது என்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.