22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம் !! கடின உழைப்பால் உச்சம் தொட்ட வசந்தகுமாரின் வாழ்க்கை பாதை.!
வியாபாரம், அரசியல், சமூக சேவை என உழைப்பின் முகவரியாய் திகழ்ந்த வசந்த் அண்ட் கோ அதிபர் எச். வசந்தகுமார் எம்.பி கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், நிமோனியா காய்ச்சலால் காலமானார்
மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடினமான உழைப்பால் வசந்தகுமார் உச்சத்தை தொட்டார்.
வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.
படித்து கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக சேர்ந்த வசந்தகுமார் அங்கு எட்டு வருடங்கள் பணிபுரிந்தார்.
அங்கு வீட்டு பொருட்கள் வியாபாரத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் கற்று கொண்டதுடன், தனது வேலையை ராஜினாமா செய்தார்.பின்னர், தனியாக தொழில் தொடங்க முடிவெடுத்து, நண்பரின் உதவியை நாடினார்.ஆறு மாதத்தில் ரூ.8000 நண்பருக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வசந்தகுமார் நண்பரின் கடையை வாங்கினார்.
1978ல் அந்த கடைக்கு வசந்த் & கோ என பெயர் வைத்தார். கடையின் முதல் பொருளை வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த அவருக்கு சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த திருப் பக்தவச்சலம் என்னும் நபர் 22 ரூபாய் கொடுத்தார்.70களில் 22 ரூபாய் என்பது மிக பெரிய பணமாகும்.
அதன் பின்னர் அயன் பாக்ஸ் போன்ற சிறிய பொருளில் விற்பனையை ஆரம்பித்த வசந்த் & கோ பின்னர் தொலைகாட்சி பெட்டி, வாட்டர் ஹீட்டர்ஸ், குளிர் சாதன பெட்டி, ரேடியோ, மின் விசிறி, மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது.
சாம்சங், சோனி, எல்.ஜி, பேனசானிக் பிலிப்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை வசந்த் & கோவில் தொடங்கியது.அதன் பின்னர் வசந்த் & கோவின் வியாபாரம் சூடு பிடிக்க இன்று தமிழகம், பாண்டிசேரி, கேரளா மாநிலங்களில் 64 கிளைகளுடன் இயங்கும் இந்நிறுவனத்தில் 1000 பேர் பணி புரிகிறார்கள்.இன்று இந்த நிறுவனத்தின் விற்பனை 900 கோடியை தாண்டியுள்ளது.
வசந்தகுமார் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது பெயரில் 412 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து, தான் நேர்மையாக வரி செலுத்தும் இந்திய குடிமகன் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்.