வாழைப்பழம் என்பதனை ஏன் தமிழ் சமூகம் ஏளனமாக பார்க்கிறது..? இதன் பின்னே என்ன நடக்கிறது..? அறிவோம்

0 1,079

எழைகளின் தோழன்..வாழைப்பழங்கள்.

நண்பன் ஒருவனுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும். போகும் வழியில் வாழைப்பழங்கள் விற்கும் ஒரு தள்ளுவண்டிக்கடை இருந்தது.
வியாபாரம் முடிந்து கிளம்ப ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார் அந்த பழ வியாபாரி. ஒரு பழம் ஆறு ரூபாய் என்றார். இரண்டு பழங்கள் பத்து ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கிவிட்டு, அதில் ஒன்றை நண்பனிடன் நீட்டினேன்.
ஏளனமாகச் சிரித்த அவன், ‘எனக்கு constipation’ இல்லடா என்றான்.
அவன் மட்டுமல்ல,நம்மில் பலரும் வாழைப்பழம் என்றவுடன் மலச்சிக்கல் தீர்க்கும் ஒரு மருந்தாகவே பார்க்கின்றோம்.

ஒரு திரைப்பட நகைச்சுவைக் காட்சி. அதில் நடிகர் ஒருவர், ‘நேத்து தான் கரகாட்டகாரன் படத்துல ரூபாய்க்கு ரெண்டு பழம் கொடுத்தாங்க’ என்பார்.
அதற்கு இன்னொரு நடிகர், ‘ஏன் இத்தனை வருசம் கோமாவுல இருந்தயா?’ என்பார். உண்மையில் கோமாவில் தான் இருந்தோமா என நினைக்கத் தோன்றுகிறது. 30 ஆண்டுகளில் அதன் விலை 10 மடங்குகளாக அதிகரித்துள்ளது.
ஆனாலும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரையும் கவரும் உணவாக அது இருக்கின்றது.

என்னிடம் வயிற்றுப்புண் கோளாறு உள்ள ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார்.உணவு முறையில் சில மாற்றங்கள் அவசியம் என ஆலோசனை வழங்கினேன். அதில் ஒரு பகுதியாக வாழைப்பழம் தினமும் ஒன்று உட்கொள்ளுங்கள் என்றேன். அவருடன் வந்த ஒரு 10 வயது சிறுவன் காரணம் இன்றி சிரித்தான். ‘வாழைப்பழத்தை போய் யாராவது சாப்பிடுவாங்களா அங்கிள் ?’ என்றான்.
இன்றைய இளம்தலைமுறை வாழைப்பழத்தை இப்படித்தான் புரிந்து வைத்துள்ளது. வாழைப்பழத்தை சாப்பிட வெட்கப்படுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வாழைப்பழம் என்பது வயதானோர் மட்டும் சாப்பிடும் ஒரு மருந்து ,அவ்வளவே. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. சில பெற்றோர்களுக்கே அதனைப் பற்றிய நன்மைகள் எதுவும் தெரிவதில்லை.
அதைப் பற்றி பார்பதற்கு முன்னர் வாழைப்பழத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

வாழைப்பழத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியில் (Papuva New Guinea) தான் வாழைப்பழம் முதன் முதலாக தோன்றியது என அகழ்வாராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது கி.மு.5000ல்.ஆனால் இதனை மறுக்கும் சிலர், இந்தியா தான் அதன் பூர்வீகம் என்கிறார்கள்.கி.பி.327ல் அலெக்ஸான்டரின் படைகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது வாழைப்பழ சுவையில் மயங்கிய அவர்கள், ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.பின்பு முகலாயர்கள் ஆட்சி காலத்தில் எகிப்து, ஈரான்,ஈராக், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகள் முழுவதிலும் வாழைப்பழம் பரவியுள்ளது. அங்கிருந்து ஆப்பிரிக்காவில் பரவிய வாழைப்பழம் சில போர்ச்சுகல் வியாபாரிகள் மூலமாக அமெரிக்காவில் பரவியது.இப்படித்தான் உலகம் முழுவதும் வாழைப்பழம் பரவியுள்ளது.

இன்று வாழைப்பழம் அதிகம் உண்ணும் நாடாக அமெரிக்கா உள்ளது.
ஆனால் அங்கு விளைச்சல் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வாழைப்பழத்தையே அவர்கள் உண்கின்றனர். வாழைப்பழ ஏற்றுமதியில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிக அளவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நம் ஊரில் 30க்கும் மேற்பட்ட வாழைப்பழ ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன.

நாகர்கோயில் மட்டிப்பழம்,திருச்சி மோரிஸ்,திருநெல்வேலி மொந்தன் பழம், கொடைக்கானல் மலைவாழை,ஈரோடு தேன் வாழை,கிருஷ்ணகிரி ஏலக்கி என ஊருக்கு ஒரு வகை பிரபலமானது.

முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழத்தை நம்மூரில்பூஜைகளுக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்தி அதன் முக்கியத்துவத்தை கூட்டுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வாழைமரங்கள் நடப்படுகின்றன. வாழைப்பழம் மட்டுமில்லாமல் வாழை மரத்தில் அனைத்து பாகங்களும் வெவ்வேறு வகையில் உதவுகின்றன.

‘இவனுக்கு உடல் எடை கூடவே இல்லை சார். ஏதாவது சத்து டானிக்’ கொடுங்க சார் என்று தன் பிள்ளைகளுக்கு கேட்டு பலர் என்னிடம் அடம்பிடிப்பார்கள். Appetite stimulants மருந்துகள் எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும், அதன் antihistamine propertyஆல் தூங்கி வழிகின்றனர். இதற்கு தீர்வாக சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வாழைப்பழத்தையே உண்ணச் சொல்கிறார்.தினமும் ஒரு நேந்திரம் பழம் உட்கொண்டால் ஒல்லிகுச்சியாக இருக்கும் உடல், பருமன் ஆகும் என்கிறார்.

மேலும் மட்டிப்பழம் குடற்புழுவை நீக்கும் என்றும்,செவ்வாழை குதிக்கால் வலியை போக்கும் என்றும் வாழைப்பழத்தின் அனைத்து மருத்துவ நலன்களைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்.

வாழைப்பழத்தில் 60 விழுக்காடு நீர்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக உள்ளது. கார்போஹைட்ரேட் சத்து,புரதச்சத்து,இரும்புச்சத்து,பொடாசியம்,சோடியம்,பாஸ்பரஸ் என எல்லா அடிப்படை சத்துக்களும் வாழைப்பழத்தில் உண்டு. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் என சக்கரைச் சத்துக்களும் இதில் உள்ளதால் ‘வாழைப்பழ சோம்பேரி’ கூட இதை உண்டால் உற்சாகமாகி விடுகிறான்.

இரும்புச் சத்து இதில் நிறைந்துள்ளதால், தினமும் ஒரு வாழைப்பழம் உண்டால் கர்ப்பிணி பெண்கள் அனிமியா போன்ற இரும்புச்சத்து குறைபாடு கொண்ட நோய்களைத் தடுக்கலாம்.

ஒருமுறை கர்ப்பிணி பெண் ஒருவர், ‘எனக்கு சளி தொந்தரவு உள்ளது .நான் சாப்பிடலாமா?’ என்றார். வாழைப்பழம் போன்ற நீரச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடுவதால் ஆஸ்துமா,சைனஸ் போன்ற நோய்களின் தீவிரம் அதிகமாகும் என்பது உண்மைதான். ஆனால் இதுவே நோயை வரவைத்து விடும் என்பது முற்றிலும் தவறான புரிதல்.

உணவு கலப்படம் பெறுகி இன்று ஒரு பூதமாக நம் முன் நின்று அச்சுருத்துகிறது.
எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘உணவு யுத்தம்’எனும் நூலில் பல்வேறு உணவுகளில் உள்ள கலப்படங்களை அலசி ஆராய்கிறார். வாழைப்பழத்தை விரைவில் பழுக்க வைக்க calcium carbide என்னும் திரவத்த கலக்கின்றனர் என்கிறார். இது புற்றுநோய் உள்ளிட்ட பலவகை நோய்கள் உண்டாக வழிசெய்கிறது.

வாழைப்பழம் பார்க்க பல பலவென்று பொன் நிறத்திலும்,நுனிகாம்பு பச்சை நிறத்திலும் காண்போர் கண்களை கவரும்வகையில் இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தோல் முழுவதும் புள்ளி புள்ளியாக இருக்கும் வாழைப்பழத்தை பார்த்து சிலர் பழம் கெட்டுவிட்டது என தவறாக புரிந்து கொள்கின்றனர். உண்மையில் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்படாத இயற்கையான பழங்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இது.

குளிர்சாதன அறையில் பதப்படுத்தப்பட்டு பக்குவமாக ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படும் பழங்கள் மீது நாம் மோகம் கொள்கிறோம். ஆனால் விளைநிலத்தில் இருந்து நேரடியாக கொண்டுவந்து வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி வியாபாரிகளை நாம் கண்டுகொள்வதில்லை.
உடைகளில் இருந்து உடைமைகள் வரை அனைத்திலும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அடிமை ஆகிவிட்ட நாம், நம்மூர் ஏழைகளின் தோழன் வாழைப்பழத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

ந. சண்முகசூரியன்
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
+91 9344465679,

You might also like

Leave A Reply

Your email address will not be published.