கீழாநெல்லி செடியை தலைகீழாகத் தூக்கி பார்த்தால் இலையின் அடிப்பாகத்தில் நெல்லிக்காய் போன்ற வடிவத்தில் ஆரம் தொடுத்தாற் போல் மிகவும் அழகாகச் சிறு சிறு காய்கள் மறைந்திருப்பதைக் காணலாம்.
கீழாநெல்லி:
- கீழாநெல்லி மூலிகை நீர்க்கசிவுள்ள மணற்பாங்கான இடங்களில் பயிராகக் கூடியது.
- ஒரு கீழாநெல்லிச் செடியை தலைகீழாகத் தூக்கி பார்த்தால் இலையின் அடிப்பாகத்தில் நெல்லிக்காய் போன்ற வடிவத்தில் ஆரம் தொடுத்தாற் போல் மிகவும் அழகாகச் சிறு சிறு காய்கள் மறைந்திருப்பதைக் காணலாம்.
- எனவேதான் இதற்கு ”கீழ்க்காய் நெல்லி” என சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
தேக பலமுண்டாக
தேவையான பொருள்கள்:
- கீழாநெல்லி
- தேற்றாங்கொட்டை
- பால்
செய்முறை:
- கீழ்க்காய் நெல்லிச்செடியை நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.
- பின் தேற்றாங்கொட்டை 70 கிராம் எடுத்துப் பசும்பால் சேர்த்து வேக வைத்து சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
- பின் தூள் செய்யப்பட்ட கீழாநெல்லி இரண்டு தேக்கரண்டியும், தேற்றாங்கொட்டை சூரணம் கால் கரண்டியும் எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் இதனை 175 மில்லி லிட்டர் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் காலை வேளை மட்டும் பருகி வந்தால் தேகபலமும், அழகும் உண்டாகும்.
சீதபேதி குறைய:
- கீழாநெல்லி இலையின் கொழுந்தை கசாயமிட்டு 60 கிராம் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வந்தால் சீதபேதி குறையும்.
நீடித்த சீதபேதி குறைய
தேவையான பொருள்கள்:
- கடுக்காய் பூ – 10 கிராம்
- மாசிக்காய் – 10 கிராம்
- மாதுளை ஓடு – 10 கிராம்
- வசம்பு – 10 கிராம்
- கீழாநெல்லி சூரணம் – ஒரு தேக்கரண்டி
- தண்ணீர்- 500 மிலி
செய்முறை:
- கற்கடகசுங்கி என்று சொல்லப்படும் கடுக்காய் பூ 10 கிராம், வெள்ளைக் காய்ச்சுக் கட்டி 10 கிராம், மாசிக்காய் 10 கிராம், மாதுளை ஓடு 10 கிராம், வசம்பு 10 கிராம் மற்றும் கீழாநெல்லி சூரணம் ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை 500 மிலி தண்ணீரில் சேர்த்து கால் பாகமாக சுண்டக்காய்ச்சி தினமும் இருவேளை 30 மிலி வீதம் குடித்து வந்தால் இரண்டு நாட்களிலே சீதபேதி குணமாகும்.
- மேலும் மருந்துகளை பொன் வறுவலாக வறுத்து சூரணம் செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து 5 கிராம் வெண்ணெய் அல்லது நெய்யில் சேர்த்து சாப்பிடலாம்.
பத்தியம்:
- காரம், புளிப்பு சேர்ந்த உணவு வகைகளை நீக்க வேண்டும்.
- பால் அல்லது தயிர் உணவு வகைகளை சேர்த்துக்கொள்ளவும்.
- எளிதில் ஜீரணமாகக்கூடிய ஜவ்வரிசிக் கஞ்சியையும் தயிர் சேர்த்து குடிக்கலாம்.
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:
- இரண்டு பிடி கீழ்வாய் நெல்லி இலையோடு 10 கிராம் கந்தகத்தை சேர்த்து அரைத்து உடம்பு முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் உடனடியாக பயன் பெறலாம்.
- மேலும் இலையை உப்பு சேர்த்து நெகிழ அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.
மஞ்சள் காமாலை குணமாக
தேவையான பொருள்கள்:
- கீழாநெல்லி
- தும்பை இலை
- கரிசலாங்கண்ணி
செய்முறை:
- மஞ்சள் காமாலையை குணப்படுத்த வேண்டுமெனில் கீழாநெல்லி கீரையை தவிர வேறு மருந்து கிடையாது.
- கீழாநெல்லிகாய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை என பத்து நாட்கள் உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
- இதனை பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது.
- காரம், புளியைத் தவிர்த்து பாதி உப்பு சேர்த்து பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.
”வருமுன் காப்பாதே சிறந்தது” என்ற பழமொழியை உணர்ந்து இத்தகைய நன்மைகள் நிறைந்த கீழாநெல்லியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம்; நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம்.