அவ்வளவு எளிதாக கடக்க முடியாது அந்த நிகழ்வுகளை…!பிணங்களை கடந்து போகும் பயணத்திலும் பாதிப் பேர் ஊணங்களாக்கப்பட்டுக்கொண்டே இடம்பெயர்தோம்.
குண்டு மழைக்கு யார் குடை பிடிப்பது
இரத்தத்தில் நனைந்த இனம் நாம்.
எதிரிகளின் தாக்குதலினை முறியடித்தோம் – துரோகிகளின்
காட்டிக்கொடுப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டோம்.
குருவி சுட தெரியாதவனெல்லாம் எங்கள்
குரல் வளைக்கு குறி வைக்க ஏங்கி நின்றோம்.
பிணங்களை கடந்து போகும் பயணத்திலும் பாதிப் பேர்
ஊணங்களாக்கப்பட்டுக்கொண்டே இடம்பெயர்தோம்.
தோட்டாக்களினதும் பீரங்கிகளிதும் சத்தத்துக்கு பாதிக்கப்பட்ட
நமக்கு நச்சு வாயு புது பாடமாகவே இருந்தது.
உடமைகளோடு ஓடி வந்தோம் – கொஞ்ச தூரத்தில்
அவைகளை விட்டு உறவுகளோடு ஓடினோம்
அதுக்கு பிறகு உயிரோடு மட்டுமே ஓடினோம்
சரணடைய கை தூக்கியவர்களும் பாதுகாப்புக்காய்
வெள்ளை கொடி காட்டியவர்களும் சுடப்பட்டார்கள்.
எஞ்சியவர்களில் சந்தேகமானவர்கள் எல்லைகளில்
வைத்தே களையப்பட்டார்கள்.
கடத்தி சென்றவர்களையே… காணாமல் போனவர்கள்
என்று கேட்க்கின்றோம் – அது பழைய காக்கா பாட்டியை
ஏமாத்திய வடைக் கதை என…புதிய நரிகள் கதை சொல்கிறார்கள்.
நெடுந்தீவு முகிலன்