ஒரு ஊரில் பாகன் ஒருவன் யானை வைத்திருந்தான். அந்த யானையை வாடகைக்கு விட்டு பொருள் சம்பாதித்து அவன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
ஒரு நாள் ஊர்வல நிகழ்ச்சி ஒன்றிற்காக யானையை ஒருவன் வாடகைக்கு எடுத்துச் சென்றான்.
என்ன காரணத்தாலோ ஊர்வலத்தின் இடையிலேயே பாதிவழியில் அந்த யானை இறந்துவிட்டது.
யானைப் பாகன் மிகவும் பொல்லாதவன். எனவே, யானையை அழைத்துச் சென்றவன் மிகமிக பயந்தான். என்ன செய்வது என்பது தெரியாமல் விழித்தான்.
யானைக்கு உரியவனிடம் போய் நடந்தவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினான்.
யானைக்கு உரிய நியாயமான விலையை தான் தருவதாக ஒப்புக் கொண்டான்.
ஆனால், பொல்லாத யானைப் பாகன் இவனது சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதோடு “அதே யானைதான் எனக்கு வேண்டும். பணம் ஏதும் வாங்கிக் கொள்ள மாட்டேன்.” என்று பிடிவாதமாகக் கூறினான்.
இந்த வழக்கு அவ்வூரில் உள்ள பஞ்சாயத்தாரிடம் சென்றது. அங்கு மிகத் திறமையான அறிவாற்றலும் சூழ்ச்சித் திறனும் படைத்த ஒருவரே தீர்ப்பு வழங்கி வந்தார்.
யானையை அழைத்துச் சென்றவன் “ஐயா, ஏதோ எனது துரதிஷ்டம் யானை இறந்து விட்டது. ஆனால் பாகனோ எனக்கு அதே யானைதான் வேண்டும் என்று கூறுகின்றான். யானையை யாரால் எழுப்பித்தர இயலும், நீங்கள் தான் எனக்கு ஒரு வழி கூற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
“சரி நான் கூறியபடி செய். யானைப் பாகனிடம் இவ்விவகாரம் குறித்து பேசித் தீர்ப்பதற்காக வருமாறு உனது வீட்டுக்கு வரவழைக்க வேண்டும்.
அவன் வரும்போது கதவை மூடிவைத்து விடு. அந்தக் கதவிற்குப் பின்புறமாக பெரிய மண்பானைகளை அடுக்கி வைத்து விடு!
நீ உள்ளே இருந்து கொண்டு அவனை உள்ளே வருமாறு சொல். அவனும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வர முயற்சிப்பான்.
அந்த முயற்சியில் உனது பானைகள் உடைந்து விடும். நீ எனக்கு அதே பானைகள்தான் வேண்டும் என்று அவனிடம் சொல்.
அவன் மறுத்தால் என்னிடம் அழைத்து வா!” என கூறினார் அப்பெரியவர்.
போனவன் பெரியவரின் சொற்படியே செய்து வைத்து வீட்டுக்குள் அமர்ந்திருந்தான்.
யானைக்கு உரியவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தான். அவன் கதவை திறந்ததும் பானைகள் உடைந்தன.
இவனோ “எனக்கு என் பானைகள் தான் வேண்டும்” என்று கூறினான். யானைக்கு உரிமையாளர் “அதெப்படி முடியும்.
வேண்டுமானால் நீ கொடுக்க வேண்டிய யானைக்குரிய பணத்தை நான் உனக்கு பானைக்குரிய பணமாகத் தருகிறேன்” என சமாதானம் செய்ய முயன்றான்.
ஆனால் பானைக்குரியவன் அதை ஏற்றுக் கொள்ளாது யானைக்காரனை பஞ்சாயத்துக்கு அழைத்தான்.
இருவரிடம் விசாரித்த நீதிபதி யானை இறந்ததற்கு அதே யானையை தரவேண்டியது நியாயமானதுதான்.
அது போல பானைக்காரனுக்கு அதே பானையைத் தரவேண்டியது யானைக்காரனின் கடமை என்று கூறினார்.
யானைக்காரனோ “அதெப்படி உடைந்த பானையை தர முடியும்?” என்று கூறினான்.
“அப்படியானால் நீ பானையைத் தரவேண்டாம். அவன் உனக்கு யானையை தர வேண்டியதுமில்லை, யானைக்கு பானை சரி” என்று தீர்ப்பு கூறினாராம்.