ஐயா நம்மாழ்வார் படம் போட்டு வியாபாரம் (அநியாயம்)செய்யும் பலரில் இருந்து வேறுபடுகிறார் மன்னார்குடியில் பழச்சாறு கடை நடத்தி வரும் சண்முகவேல்.
“ஒரு காலத்துல கிராமத்துல தீவிரமா விவாசாயம் பண்ணிக்கிட்டு இருந்த ஆள்தான் நான்..இங்கே வந்த பிறகு அது சார்ந்த பணியை செய்யனும்னு இந்த கடையை ஆரம்பிச்சேன்.
மக்கள் கிட்டே காசு வாங்குறோம் அவங்க உடம்புக்கு தீங்கு இல்லாத உணவைக் கொடுக்கனும்!”என்று சொல்லும் இவர் கடையில் கொடுக்கும் பழச்சாறில் வெள்ளை சீனி கலப்பது கிடையாது அதற்கு பதில் கரும்பு பாகு,சாறு கலக்கிறார்.
கரும்பு பட்டையில இருக்கிற அழுக்கு தூசு கூட இருக்ககூடாதுனு அதற்கான ஒரு இயந்திரத்தில் விட்டு தூசு நீக்கி சாறு பிழிகிறார்.
மைதா இல்லாமல் கோதுமை பயன்படுத்தி பானி பூரி தயார் செய்கிறார்.
காலவாயில் எரிக்க இருந்த துண்டு பனை மரங்களை வாங்கி வந்து அவற்றை அழகான இருக்கைகளாகவும்,மேசையாகவும் மாற்றி கடையில் போட்டு வைத்து இருக்கிறார்.
கடைக்கு உள்பக்கத்தில் அரச மரக்கன்று ஒன்று வளர்ந்து வருகிறது.
“நெறைய பேரு அரசமரம் சுவத்த பேத்துடும்..அத வெட்டிடுங்க!னு சொன்னாங்க..
நாம உயிர் வாழ அதிகப்படியான ஆக்ஸிஜன் கொடுக்கற மரம் சுவத்த பேத்தா பரவாயில்லை!னு விட்டுட்டேன்!”என்கிறார் இவர் பெருமிதமாக.
நல்ல மனுசங்களை நாடறிய செய்ய வேண்டியது நமது கடமை என்பதற்காக இந்த பதிவு.
தொலைக்காட்சி,பத்திரிகை நண்பர்கள் கூட இதை செய்தியாக்கி இவரை பாராட்டலாம்.!