இணையம் தகவலைத் தரலாம் வலைத்தளம் கலைகளைத் தரலாம்…! ஆனால் இவற்றை எங்கே பெறுவாய்..?

0 274

விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

கருவறை தாண்டிய பாதங்கள்
மண்ணின் முதுகு மிதித்து
புழுதி பிடித்து
உரண்டு புரண்டு உறவாடுகின்றன !

கல்லறை நோக்கிய பயணங்கள்
மண்ணின் அறை திறந்து
நிரந்தர நித்திரையில்
சலனம் தொலைத்து துயில்கின்றன !

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

கடவுள்
மண்ணின் முதல் விவசாயி !

மனிதன்
கடவுள் படைத்த முதல் விவசாயி !

கடவுள்
மண்ணில் கைதொட்டு
உயிரை உருவாக்கினார் !
மனிதன்
மண்ணில் கைதொட்டு
பயிரை உருவாக்கினான் !

கடவுளே
உலகின் முதல் விவசாயி !
மனிதன்
உலகின் இரண்டாம் விவசாயி.

மனிதனுக்கு
கடவுள் தந்த முதல் வேலை
விவசாயம் !

நிலத்தைப் பண்படுத்து !
என்பதே இறைவன் கொடுத்த வேலை
அவனோ
படைப்பைப் பண்படுத்தாமல்
படைத்தவனைப் புண்படுத்தினான்.

ஏதேன் எனும்
மண்ணக சொர்க்கம் விடைபெற்றது
இனி
மண்ணை சொர்க்கமாக்கு
வியர்வையை விலையாக்கு
என
அனுப்பி வைத்தார் ஆண்டவர் !

முதல் விவசாயி
களமிறங்கினான் !
நிலமிறங்கினான்

விவசாயி
இறைவன் எனும் முதலாளியின்
முதல் ஊழியன் !

விவசாயம்
மனிதன் எனும் படைப்பாளியின்
முதல் ஊழியம்!

விவசாயம்
ஆதி மனிதனின்
நீதித் தொழில் !

மண்ணின் மைந்தனின்
வியர்வைத் தொழில் !

விழுந்த மனிதன்
உழுத தொழில் !

விவசாயம்
இறைவனால் எழுதப்பட்ட பணி !

விவசாயம்
மனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் !

இன்று ??

இன்று
விவசாயம்,

தற்கொலையின் திறவுகோல் !
பட்டினியில் படுக்கை !
துயரத்தின் இருக்கை !
கண்ணீரின் அருவி !

பயிர்களின் வேர்களில்
புதைபடுகிறான் விவசாயி !

நீரற்ற பூமியில்
வேரற்ற நிலங்களில்
சோறற்ற வயிறுடன்
வதைபடுகிறான் விவசாயி !

வெடித்த வயலின்
வறண்ட நாக்குகளில்
அவனது
உயிரின் கடைசிச் சொட்டும்
உலரத் துவங்குகிறது !

நீர் வற்றிய
ஆறுகளில் அவனது கனவின்
முதல் சுவடும்
களவாடப்பட்டு விட்டது !

ஆறுகள்
நீரைத் தொலைத்தன !
நீரற்ற ஆறுகள்
தம்மையே தொலைத்து விட்டன.

சுயநலச் சுருக்குப் பைகள்
மணலை அகழ்ந்தன !
தன்னல மனங்கள்
ஆக்கிரமித்து நகைத்தன !
விழுகின்ற மழையும்
தங்க இடமின்றி
அழுதழுது அலைந்து திரிகிறது !

இன்று விவசாயம்
நிச்சயத் தோல்வியின்
நிதர்சன வெற்றி !

இறைவன்
நீரையும் நிலத்தையும் பிரித்தார் !
மனிதன்
நீரை நிலத்தினில் ஒளித்தான் !

கர்நாடக எல்லையில்
தண்ணீருக்குக் காவல்
தமிழக எல்லையில்
கண்ணீருடன் காவல் !

இறைவன் மழையை
பொதுவாய்ப் பொழிந்தார் !
மனிதன்
பொதுவை தனியே பிரித்தான்

இறைவன் வளங்களை
பொதுவாய் வைத்தார்
மனிதன்
வளங்களை களவில் வைத்தான்.

கடலுக்கு அனுப்ப
அனுமதிக்கும் நீர் கூட
தமிழனின்
உடலுக்கு அனுப்ப
அனுமதிக்கவில்லை மனிதன் !

அணைகளில் துயிலும் நீரை,
மனிதனின்
துணைக்கு அனுப்ப
துளியும் விரும்பவில்லை
சுயநல மனிதன் !

பலருக்கு
தண்ணீர் என்பது
அரசியல் சதுரங்கம் !

விவசாயிக்கோ
தண்ணீர் என்பது
இசையின் மிருதங்கம் !

நீரற்ற நிலம்
இசையற்ற கருவியாய்
சலனமற்றுக் கிடக்கிறது !

இறைவன்
படைத்தான் !
மனிதன்
உடைத்தான் !

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

புலம் பெயர்ந்தவன் கூட
புலன் பெயரவில்லை

நீ
நிலம் பெயராமல் இருக்கிறாய்
ஆனால்
நிஜம் உணராமல் இருக்கிறாயே !

வரப்புயர நீருயரும்
பொய்யாகிறதே !
இங்கே வரப்புகள் மட்டும் தானே
உயர்கின்றன !

வளங்கள் அழிகையில்
தலைமுறை அழியும்!
நிலங்கள் அழிகையில்
நிலவாழ்வு அழியும் !

முகசாயம் அழிகையில்
நாடகம் முடியும் !
விவசாயம் அழிகையில்
தேசம் அழியும் !

நிலத்தில் காங்கிரீட் நட்டோம்
மழை விடைபெற்றது !

நிலத்தில் முட்களை நட்டோம்
வளம் விடைபெற்றது !

நிலத்தை கவனிக்காமல் விட்டோம்
உறவு விடைபெற்றது !

இன்று
நிலங்கள் அனாதைகளாகிவிட்டன.
அதன் தொப்புள் கொடிகளுக்கு
நீரில்லை !

ஒளிச்சேர்க்கைக்கு
வழியில்லாமல்
இலைகளெல்லாம் தலையிழந்தன.
மரங்களெல்லாம் களையிழந்தன.

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

ஒன்று படுவோம் !

பூமி என்பது
தன்னலத் தாழ்பாழ்களில்
சிரச்சேதம்
செய்யபடுவதற்கானதல்ல !

பூமி என்பது
வெறுப்புகளின் விதைகளினால்
உயிர்சேதம்
செய்வதற்கானதல்ல !

நீரின்றி அமையாது
நிலம் !
பயிரின்றி அமையாது
உயிர் !

இணையம்
தகவலைத் தரலாம்
வலைத்தளம்
கலைகளைத் தரலாம் !
அரிசியை எங்கே
டவுன்லோட் செய்வது ?
தண்ணீரை எங்கே
தரவிறக்கம் செய்வது ?

ஒன்றுபடுவோம் !

வேர்கள்
நீரில் வித்தியாசம் பார்ப்பதில்லை !
மனிதர்கள் ஏன் பார்க்கவேண்டும் ?

தமிழகப் பசிக்கும்
கர்நாடகப் பட்டினிக்கும்
வித்தியாசம் இல்லை
பகிர்தலில் எதற்கு பதட்டம் ?

ஒன்றுபடுவோம் !

எங்கே விழுந்தாலும்
மழை ஈரமாகவே விழுகிறது !
எங்கே இருந்தாலும்
மனம் ஈரமாகவே இருக்கட்டும் !

நிலம் உலர்வது
மனிதம் உலர்வதின் அடையாளம் !
நிலம் செழிப்பது
மனிதம் செழிப்பதன் உத்தரவாதம் !

ஒன்றுபடுவோம்
உணர்வுகளால் ஒன்றுபடுவோம் !
அரசியல்
நில
இன எல்லைகள் களைவோம் !

மனிதம் என்பது
நமக்குள் இருப்பது
பிறரின் வார்த்தைகளால்
அதை கொல்லாமல் இருப்போம் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

விவசாயம்

வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

ஆக்கம்: சேவியர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.