30 எம்.ஜி.ஆர்… 30 ஜெயலலிதா சிலைகளை செய்யச்சொல்லி
சிற்பியை கடனில் தவிக்கவிட்ட அ.தி.மு.க நிர்வாகி…
அவரே தரும் தகவல்,
“திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ராஜன் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதி திடீர்னு எங்க சிற்பக் கூடத்துக்கு வந்தார். கட்சிக்காரங்களோட தடபுடலாக நுழைஞ்சவர் ‘30 எம்.ஜி.ஆர்., 30 ஜெயலலிதா சிலைகள் வேணும்’னு சொல்லி ஆர்டர் கொடுத்தாரு.
60 சிலைகளான்னு நான் திகைச்சுப்போய் ‘உண்மையிலேயே அத்தனை சிலை வேணுங்களா’ன்னு கேட்டேன். அதுக்கு அவரு ‘ஆமாம்’னு ஒரு லட்சம் ரூபாயை கையில அட்வான்ஸா திணிச்சிட்டாரு. ‘அம்மா பிறந்த நாளான வர்ற பிப்ரவரி 24-ம் தேதி அன்னைக்கு 60 சிலைகளையும் கொடுத்துடணும்’னு சொன்னார். ஒரு சிலைக்கு 25 ஆயிரம் ரூபாய் பேசி மொத்தம் 15 லட்சம் ரூபாய்க்கு ஆர்டரை முடிச்சோம்.
ஆனா, அவ்வளவு சிலைகளைச் செய்ய பணம் இல்லை. என் மனைவி நகைகளை அடகு வெச்சி பணத்தைத் திரட்டுனேன். நடுவுல வந்து பார்த்த ராஜன், இன்னும் ரெண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார்.
அவர் சொன்னபடி போன வருஷம் பிப்ரவரி 20-ம் தேதியே 60 சிலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு போனை போட்டேன். ‘இதோ இப்ப வந்துடறேன்’னார். அவர் வந்து 13 லட்சத்தை கொடுத்துட்டு சிலைகளை டெலிவரி எடுத்துட்டுப் போவார்னு சந்தோஷமாக் காத்திருந்தேன்.
ஆனா அவரு வரவும் இல்லை; போனையும் எடுக்கலை. தொடர்ந்து போனை அடிச்சப்ப ஒருகட்டத்துல போனை ஆஃப் பண்ணி வெச்சிட்டாரு. அப்புறம் ஒருதடவை போனை எடுத்தவர், ‘யோவ், எங்களுக்கே ஆயிரத்தெட்டுப் பிரச்னை… இதுல நீ வேற’ன்னு கட் பண்ணிட்டாரு. நான் நேர்ல போய் கால்ல விழுந்து கேட்டுட்டேன். பணம் தரலை. எட்டு மாசம் ஓடிடுச்சு.
நடுவுல இந்தப் பக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கான்வாய்ல போகும்போது, சிலைகளைப் பார்த்துட்டுப் பாராட்டுனாரு. அவர்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவருக்கு நான்கு முறை புகார் மனுவும் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. கடன் கொடுத்தவங்களோட ஏச்சுக்களைக் கேட்க முடியலை. தற்கொலைகூட பண்ணிக்கலாமான்னு தோணுது…” என்கிறார் விரக்தியுடன்!
ஏண்டா இதெல்லாம் ஒரு பொழைப்பா ?
குறிப்பு:இனி எந்த ஒரு சிலை கலைஞனும் அரசியல்வாதி சிலைகளை செய்யும் போது பணத்தை பெற்றுக் கொண்டு பிறகு வேலையை ஆரம்பியுங்கள் அதுவே குடும்பத்திற்கு நல்லது..!