செங்காந்தள் – கண்வலி செடி
தமிழ் மாநிலத்தின் மலராகவும் , தமிழீழ தேசிய மலராகவும், ஜிம்பாபே நாட்டின் தேசியமலராகவும் உள்ளது செங்காந்தள் மலர். ஈழத்தில் வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதும் இம்மலர்தான்..
சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் பேசப்படும் இத்தாவரம் அழிந்துவரும் தாவர இனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.. தமிழகத்தின் பல பகுதிகளில் இது விவசாயம் செய்யப்படுகிறது. இத்தாவரம் ஒரு நஞ்சு செடியாகும். இதன் கிழங்கு , விதைகள் மிகுந்த விஷம் கொண்டவை..
இச்செடியின் கிழங்கை உண்டு உயிர் மாய்த்தோர் பலராவர். இச்செடியின் கிழங்கு கலப்பை போல இருப்பதால் கலப்பை கிழங்கு செடி என்றும் அழைக்கப்படுகிறது. மூலிகை தாவரமான இச்செடி மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகிறது. இதன் விதைகளில் இருந்து புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
எனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா , இத்தாலி முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.. சென்ற ஆண்டு ஓட்டன்ச்சத்திரம், மூலனூர் பகுதிகளில் ஒரு கிலோ விதை 3000 ரூபாய்க்கு விலை போனது..
நான் பள்ளி பயிலும்போது எந்த வகுப்பு என்று நினைவில்லை. தமிழ் பாடத்தில் , குறுந்தொகை பாடல் ஒன்று இருந்தது. அதில் “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” என்று ஒரு வரி உண்டு . தேர்வில் எல்லாம் இடம் சுட்டி பொருள் விளக்கம் கேட்பார்கள்.
என் தமிழ் ஆசிரியர் அவ்வளவு அழகாக அப்பாடலை நடத்தி பொருள் தந்தார். இதுநாள் வரை அவ்வரி மறக்கவே இல்லை. . காந்தள் மெல்விரல் எவ்வளவு அழகிய உவமை…