கேரளாவில் கனமழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடியாக குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கேரளாவில் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
தொடர்மழையால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது.
முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக பாசனத்துக்கு 2 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதனை தவிர உபரி நீர் இடுக்கி அணைக்கு திறக்கப்படுகிறது.
இதனிடையே கேரளாவில் கனமழை பெய்து மக்களிடையே அச்சம் நிலவுவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.