சென்னை : தமிழகத்தில், ஆகஸ்ட், 1 முதல், பஸ்கள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச், 25 முதல், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில், சில நாட்கள் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பின், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததும், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி, இம்மாதம், 1ம் தேதியில் இருந்து, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பொது ஊரடங்கு, 31ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என, அரசு ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்படா விட்டாலும், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையிலும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுப் போக்குவரத்தை அனுமதித்தால், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஆக., 1 முதல், பஸ், ரயில் போக்குவரத்து இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக, மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்களை இயக்கலாம் என, சில அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது, ஓரிரு நாளில் தெரியும்.
Dinamalar