மார்பில் வலி வந்தால் மாரடைப்பா.? தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்.!

0 233
  • மார்பில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள். உடனே இ.சி.ஜி. எடுத்துப்பார்த்துவிடுவது நல்லது என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா?
  • உண்மையில்லை.
    மார்பில் வலி வந்தால் அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மார்பு வலிக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மார்புக்கூட்டில் ஒரு டஜன் விலா எலும்புகள் உள்ளன. இவை அனைத்தும் மைய மார்பு எலும்போடு இணைகின்றன. விலா எலும்புகளுக்கு இடையில் தசைகள் உள்ளன.
  • மார்புக்கூட்டுக்குள் நுரையீரல்கள், நுரையீரல் உறைகள், சுவாசக்குழாய்கள், இதயம், இதய உறை, ரத்தக்குழாய்கள், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, உதரவிதானம் எனப் பல உறுப்புகள் உள்ளன. இவற்றில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் மார்பில் வலி ஏற்படும்.
  • இதயம் உயிர் காக்கும் உறுப்பு. இதயத்தில் வலி ஏற்பட்டால், உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இதயவலியையும் மார்பில் ஏற்படும் மற்ற வலிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டால், மார்பில் வலி வரும்போது மிரட்சி அடையத் தேவையில்லை.

    இதயவலியில் இரண்டு நிலைகள் உண்டு. நடக்கும்போது, மாடிப்படிகளில் ஏறும்போது, ஓடும்போது மார்பில் வலிப்பது, சிறிது ஓய்வுக்குப் பின் வலி குறைவது இதயவலியில் முதல் வகை. இதற்குப் பெயர் ‘ஆஞ்சைனா’. மாரடைப்புக்கு முந்தைய நிலை இது. நடு மார்பில் கயிறு கட்டி அழுத்துவது போல் வலிவந்து கழுத்து, தாடை, இடது கைக்கு அது பரவினால் மாரடைப்பு. இது இதயவலியின் இரண்டாம் நிலை. இந்த வலியின்போது உடல் கடுமையாக வியர்க்கும், மூச்சுத் திணறும், மயக்கம் வரும். இதுதான் உயிருக்கு ஆபத்து தரும்.

  • நுரையீரலில் நிமோனியா, காசநோய், சுவாசக்குழாய் அழற்சி காரணமாகச் சளி கட்டும். இதனால் மார்பில் வலி வரும். அப்போது காய்ச்சல், இருமல், சளி, சளியில் ரத்தம் போன்ற துணை அறிகுறிகளும் காணப்படும். நுரையீரல் உறையில் பாதிப்பு இருந்தால், மார்பின் பக்கவாட்டுப் பகுதிகளில் வலி கடுமையாக இருக்கும். தும்மும்போதும் இருமும்போதும் வலி அதிகரிக்கும்.

    பெரும்பாலான நேரம் மார்புவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகள்தான் காரணமாக இருக்கும். இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் பிதுக்கம், உணவுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்பட்டிருந்தால், மார்பில் வலிவரும். இந்த வலியை எளிதில் இனம் கண்டுகொள்ளலாம். நடு மார்பில் வலி அல்லது எரிச்சல் தோன்றும். வாந்தி, ஏப்பம் வரும். நாம் சாப்பிடும் உணவுக்கும் மார்பில் வலி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதை உணரமுடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.