மழைக்காலம் வருகிறது கட்டாயம் இந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுங்கள்..!

0 337

மழைக்காலம் வருகிறது — சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம். இதுக்கெல்லாம் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.

1. வீட்டிலே ஒரு நாலு நாளைக்காவது அரிசி பருப்பு ஸ்டாக் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ( இது கூட இருக்காதான்னு கேக்காதீங்க…. சென்னை பெருமழையின் போது ஒரு நாள் மழைக்கே மாடி வீட்டில் இருந்தவர்கள் கூட எதுவுமே இல்லாததுபோல பேசியது மறக்கவில்லை)
2. கையிலே அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு கொஞ்சம் பணமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். (இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்)

3. ஜுரம், தலைவலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, இருமல் போன்றவற்றிற்கு மாத்திரைகள் தைலம் முதலியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
4. வீட்டின் சமையலறையில் உருளைக்கிழங்கு, வெங்காயம், சேப்பங்கிழங்கு, வேப்பம்பூ போன்ற சீக்கிரம் கெட்டுப்போகாத பொருட்களை வைத்திருக்கவும்.

5. தண்ணீர் கேன் ஒன்று கூடுதலாக வைத்திருக்கவும். அப்படியே கேஸ் சிலிண்டரும்.
6. குடை, டார்ச், ரெயின் கோட் போன்றவற்றை தூசு தட்டி எடுத்து வைக்கவும்

7. விளக்குகளைத் துடைத்து வைக்கவும். கடையிலிருந்து இலுப்பை எண்ணை ஒரு லிட்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம் – இது நின்று எரியும் வெகு நேரம்
8. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியை (ஈமெயில் முகவரி இல்லீங்க) ஒரு டயரியில் அல்லது நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளவும்

9. எப்படியும் இன்றைக்கு எல்லோரும் குறைந்தது இரண்டு சிம்மாவது வைத்திருக்கிறோம். அப்படியே வீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரே ஒரு பி எஸ் என் எல் சிம் வைத்திருக்க வேண்டும் – அதுதான் ஆபத்து காலத்திலும் வேலை செய்த ஒரே ஒரு நிறுவனம்
10. ஸ்மார்ட் ஃபோனை மட்டும் நம்பியிருக்காமல் அந்தக் காலத்து நோக்கியா போன்ற சாதாரண மொபைல் ஃபோன் ஒன்றாவது வைத்திருக்கவும் – இதுதான் குறைந்த பட்சம் 2-3 நாட்களாவது தாக்குப் பிடிக்கும்

11. நானோ சிம்முக்கான அடாப்டர் கைவசம் இருக்கட்டும் – பிற ஃபோன்களில் உபயோகப்படுத்த தேவைப்படும்
12. வண்டிகளில் பெட்ரோலை ரிசர்விலேயே வைத்திருக்காமல் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்காவது குறைந்த பட்சம் 3-4 லிட்டர் மோட்டார் சைக்கிளிலும் 10-15 லிட்டர் காரிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

13. அந்தக் காலத்தில் கிரிக்கெட் கமெண்டரி கேட்போமே ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ – ஞாபகமிருக்கிறதா? அதே போல ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு பேட்டரியும் கைவசம் வைத்திருக்கவும் – புயல் மழை பெருவெள்ளம் போன்ற காலங்களில் அரசின் அவசர செய்திகள் ரேடியோ மூலமாகவே சென்றடைகிறது. எஃப் எம் மட்டுமல்லாமல் மீடியம் வேவும் இருக்கிற ரேடியோவாக இருப்பது நலம்
14. மழை புயல் காரணமாக வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நேரிடும். ஸ்மார்ட் ஃபோனும் வேலை செய்யாது. சிக்னலும் இருக்காது, இந்த மாதிரி நேரங்களில் சீட்டுக் கட்டு, தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம் போன்ற நமது பழைய விளையாட்டுக்களை குடும்பத்தினரோடு விளையாடலாம். ஸ்மார்ட் ஃபோனுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கின்றது என்பதை உணரலாம்.

15. பயன்படுத்தாத பழைய உடைகள், போர்வைகள், குடைகள், ரெயின் கோட் போன்றவற்றைத் தேடி எடுத்து தெருவோரங்களில் வசிப்பவர்கள், நடைபாதைவாசிகள், ஏழைகள் போன்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

ரொம்ப கஷ்டமாயிருக்கா? அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்று கத்துவதற்குத் தயாராக இருங்கள். வேறென்ன செய்ய முடியும் நம்மால்.?

காரணம் காசுக்கு வாக்கு..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.