பொலிக்காளை, பூச்சிக்காளை , கோவில்காளை என்றால் என்ன?

0 655

ஏன் நாம் அதை வளர்க்க வேண்டும்..!!!!

இன்றைய நாட்களில் நம் இளைஞர்களிடையே நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும் என்பதிலும், பாரம்பரிய விவசாயம் செய்ய வேண்டும் எனவும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதுவே உழவுத் தொழிலை முன்னேற்றப் பாதையில் கட்டாயம் இட்டுச்செல்லும் என்பதில் துளியும் ஐயமில்லை.

பொலிக்காளை / பூச்சிக்காளை என்பது நாம் வளர்க்கும் மாடுகளிற்கு இனவிருத்தி செய்வதற்காகவே பயன்படும் காளைகளை குறிப்பதேயாகும். கொங்கு மண்டலத்தில் பூச்சிக்காளை / பொலிக்காளை என்பர். அது பல மாவட்டங்களில் கோவில் காளை என்பர்.

நம்மில் பலர் உழவு வேலை செய்ய, பார வண்டி இழுக்கும் மற்றும் சவாரி வண்டியில் பயன்படுத்துவதை பூச்சிகாளை என நினைத்து வருகின்றனர். அவைகளை நாம் எருதுகள் என்போம். கட்டாயமாக அவைகளை உரை அடித்திருப்பர் / காய் நசுக்குதல் / விதர் நீக்கி பயன்படுத்துவதையே எருதுகள் ஆகும்.

கோவில் காளை/ கோவில் மாடு:-

கோவில் காளையானது சிவகங்கை, மதுரை மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் சில கிராமங்களில் மட்டுமே காணப்படுகிறது.

நமது முன்னோர்கள் அதாவது தாத்தா மற்றும் நமது பாட்டன் காலம் வரை சிறந்த நாட்டு காளை கன்றுகளை கோவில்களுக்கு நேர்ந்துவிடும் பழக்கம் இருந்து வந்தது. அப்படி பல காளை கன்றுகள் கோவிலுக்கு நேர்ந்து விடும் சமயங்களில் கோவில் நிர்வாகம் சிறந்த காளைக் கன்றுகளை வைத்துக்கொண்டு மற்றதை ஏலம் விட்டு வளர்ப்புக்கு கொடுப்பர். அவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் மூலம் பராமரிக்கப்படும் காளைக்கன்றுகளே பருவடைந்தவுடன் அதாவது இரண்டு வயதுக்கு பின்னர் கோவில் காளைகளாக அந்த கிராமத்தில் வலம் வரும். பொதுவாக இந்த காளைகளை பெரும்பாலும் கயிறு போட்டுகாட்டி வளர்க்க மாட்டார்கள் அதனால் இந்த காளைகள் நன்கு பழக்கப்பட்டு காணப்படும்.

அந்தப்பகுதியில் உள்ள மாடுகள் அனைத்திற்கும் இந்த கோவில்காளைகளையே இனச்சேர்க்கைக்கு பயன்டுத்தி வந்தனர். இன்னும் சிவகங்கை மாவட்டங்களில் அதிமான கோவில் காளைகள் காணப்படுகிறது. அந்த ஊரில் உள்ள மாடுகள் பருவத்திற்கு வந்து கத்தும் போது இந்த கோவில் காளை தானே வந்து மாட்டுடன் இனச்சேர்க்கை செய்துவிட்டு சென்றுவிடுதாக அந்தப்பகுதி நண்பர் கூற கேட்டுள்ளேன்.

நமது கொங்கு மண்டலத்தில் பூச்சிக்காளைகளானது அங்காங்கே மட்டும் காணப்படுகிறது. அதனால் நமது விவசாயி பூச்சிகாளை எங்கே உள்ளது தெரியாமலும்?? ஆட்டோவில் ஏற்றி சென்று வருவதல் உடன்பாடு இல்லாமலும்??? ஆயிரம் ரூபாய் செலவு செய்ய முன்வராமலும் கால்நடை மருத்துவரை கட்டுத்தாரைக்கு வரவழைத்து AI செய்கிறார். அதாவது ஊசி மூலம் கருத்தரிக்க முயற்சி செய்கிறார். இதனால் பெரும்பாலான மாடுகளின் பிறப்பு உறுப்புகள் மறுத்துபோய் அவைகள் சினை பிடிக்காமல் போகிறது. சினைபிடிக்கும் சில மாடுகள் பெரும்பாலும் 100% தேசிய இன நாட்டு கன்றுகளை இனவதில்லை சில நேரம் அவை கலப்பின கன்றுகளை (பன்றிகளை) ஈனுகிறது. அதன் பிறகு புலம்பும் பல விவசாயிகளை காணமுடிகிறது.

பெரும்பாலும் ஊசி போட்டு சினைபிடிக்கும் மாடுகள் அடுத்த பருவத்திலே சினை பிடிக்க மறுக்கிறது பல முறை முயன்று தோற்றுப்போன விவசாயி அந்த மாட்டை அது ஈன்ற கலப்பினக் கன்றயையும் வாரச்சந்தைகளில் கொண்டு வந்து வெட்டுக்காரனுக்கு மாடுகளை விற்று செல்கிறார் இதை பார்த்தால் மனம் வேதனைபடுகிறது.

இனச்சேர்க்கை பூச்சிகாளைகளை பயன்டுத்தாமல் போவதனால் அந்த மாடு அது ஈன்றுள்ள கன்றும் அழிகிறது. இந்த நிலை இனி வராமல் தடுக்க நமது நாட்டு இன மாடுகளிற்கு கட்டாயம் சினை ஊசி போட மாட்டேன் என சபதம் கொள்ள வேண்டும். கட்டாயம் பூச்சிக்காளைகள் முலமாக மட்டுமே நாட்டு மாடுகளை சினை பிடிக்க வைக்க வேண்டும்.

அப்ப நாம் அதிகமான பொலிக்காளைகள் / பூச்சிக்காளைகள் / கோவில் காளைகளை வளர்க்க வேண்டும். நாம் கட்டாயமாக. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறந்த காளைக்கன்றை தெரிவு செய்து அல்லது வாங்கி வந்து குழுவாக இணைந்து பராமரித்து அந்த காளையை பணம் வாங்காமல் இலவசமாகவோ அல்து சிறு தொகையை வாங்கிக்கொண்டோ இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தினால் மட்டுமே கட்டாயமாக நாட்டு இனங்களை காத்து “வீட்டுக்கொரு நாட்டு மாடு; வியாதிக்கு போடு பூட்டு” எனும் நிலையை அடைய இயலும்.

அது போல் சினை ஊசிக்கு பிறக்கும் கன்று நல்ல ஜாடையில் பிறந்தாலும் பல கன்றுகள் இரண்டு வயதை கடந்தும் பருவத்திற்கு வருவதில்லை.

பருவத்திற்கு வராத மாடுகளிற்கான வைத்தியம் “தொடர்ந்து ஒரு மாதம் காலம் காலை வேளையில் வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை கொடுத்து வரவேண்டும்”.

குறிப்பு : வைத்தியத்திற்காக நாமோ அல்லது கால்நடைகளிற்கு சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொள்ளும் போது அதன் தோலை நீக்கி அதன் உள்பகுதியை (நொங்கை) நான்கைந்து முறை பச்சை தண்ணீரில் அலைசி பயன்படுத்த வேண்டும்.

சினை நிக்காத மாடுகளிற்கான வைத்தியம் “நல்ல நசியத்திற்கு (பருவத்திற்கு/Heatக்கு) வந்த இரு தினங்கள் கழித்து கால்நடை மருத்துவரை வரழைத்து அதன் கர்ப்பபையை சுத்தம் செய்து மற்றும் சில மாடுகளின் கற்பையினுள் உள்ள கட்டிகளை அகற்றிவிட்டு அதற்கு நாள் முதல் அதிகாலை வெறும் வயிற்றில் ஒருவாரம் கைபிடியளவு சிரகத்தை கரும்பு சர்க்கரையுடன் கலந்து கொடுக்க வேண்டும். இரண்டாவது வாரம் தோல் நீக்கிய நன்கு அலசிய சோற்றுக்கற்றாழை மடலை தினமும் வெரும் வயிற்றில் கொடுக்க வேண்டும். மூன்றாவது வாரம் தினமும் வெறும் வயிற்றில் இரு கையிடி அளவு பிரண்டை அல்லது முருங்கை இலை தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வர வேண்டும்” இது தஞ்சை பகுதி இயற்கை வழி கால்நடை மருத்துவர் திரு.புண்ணியமூர்த்தி ஐயா அவர்களின் குறிப்பு.

மொத்தம் 21 நாட்கள் இந்த வைத்தியம் முடிந்துவுடன் வரும் அடுத்த பருவத்தில் கட்டாயமாக பூச்சிக்காளையுடன் இனச்சேர்க்கை செய்யும் பல வருடம் பருவத்திற்கு வராத மாடும் கட்டாயம் சினை பிடிக்கும்.

சினை பிடிக்காத மாடுகளிற்கு ஆனை நெருஞ்சியை அல்லது நாட்டு மருதாணி இலை வெறும் வயிற்றில் இரண்டு முதல் மூன்று வாரங்களிற்கு அளித்து வந்தால் கட்டாயமாக சினை பிடிக்கும்.

திரு.புண்ணியமூர்த்தி ஐயாவின் சில கால்நடை வைத்திய குறிப்புகள்:-

பொதுவான சில பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடித்தால், மழைக் காலங்களில் நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துவிட முடியும். மழை நேரங்களில் மாடுகள் சரியாக மேய்ந்து இரை எடுக்காது. அதோடு புதிய புற்களோடு முளைத்திருக்கும் களைகளையும் சாப்பிடுவதால், கழிச்சல் நோயும் வரலாம். அந்த மாதிரி நேரங்களில் அவ்வப்போது மாடுகளுக்கு தானியங்களையும், அடர்தீவனங்களையும் கொடுத்து சமாளிக்கலாம்.

திடீரென்று, அடர்தீவனங்களைக் கொடுக்கும்போது செரிமானப் பிரச்னைகள் வந்து விடும். எனவே, முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக அடர்தீவனங்களையும் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களுக்குத் தேவையான சோளத்தட்டை, கடலைக்கொடி, வைக்கோல் போன்றவற்றையும் முன்பே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கோழிகள் உட்பட அனைத்துக் கால்நடைகளுக்கும் மூலிகை உருண்டைகளைத் தயாரித்துக் கொடுத்துவிட வேண்டும்.

கொசுக்களைவிரட்ட மூலிகை மூட்டம்!

மாலை நேரத்தில் இரும்புச் சட்டியில் மணலைக் கொட்டி கட்டை, கரி மூலம் நெருப்பு உண்டாக்கி… நொச்சி, பலா, எருக்கு, தைல மர இலை என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய… ஆடு, மாடுகள் சாப்பிடாத மூலிகை இலைகளையும், சாம்பிராணியையும் போட்டு மூட்டம் போட்டால்… கொட்டகையில் கொசு தொல்லை இருக்காது. இதனால் பெரும்பாலான நோய்கள் பரவாமலும் தடுக்க முடியும்.

வருமுன் காப்போம்!

மழைக் காலங்களில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் வரும். இந்நோய்க்கான தடுப்பூசி கால்நடை மருந்தகங்களில் இலவசமாகவே போடப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல், அதைப் போட்டு வர வேண்டும். சுவாச சம்மந்தமான நோய்களும் இந்தக் காலத்தில் தாக்குதல் நடத்தும். மூலிகை உருண்டை கொடுப்பதன் மூலம் இவற்றை தடுத்து விடலாம்.

ஒருவேளை நோய் தாக்கி விட்டால்… மருந்துகள் மூலம் சரிப்படுத்தலாம்” என்று சொன்னார் புண்ணியமூர்த்தி.

”மாடுகளை ஈரம் இல்லாத இடத்தில் கட்டுதல்; பசுந்தீவனத்தின் அளவை குறைத்து, உலர்தீவனத்தை அதிகப்படுத்துதல்; அடர்தீவனத்தில் தண்ணீரின் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

அதையும் தாண்டி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே சரி செய்யலாம்” என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவர் ராஜமாணிக்கம், அந்த மருந்துகளை வரிசையாகப் பட்டியலிட்டார்:-

குளிர் காய்ச்சல் நோய்:

வெங்காயம்-200 கிராம், மிளகு-10 கிராம், வெற்றிலை-5, சீரகம்-5 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து உள்ளே கொடுத்தால்… அரை மணி நேரத்திலே காய்ச்சல் குறைந்து விடும்.

ஜன்னி:

மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வேப்பண்ணெயைத் தேய்த்து, சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும். அல்லது குப்பைமேனி இலை-50 கிராம், சின்ன வெங்காயம்-25 கிராம் எடுத்துக் கொண்டு, இரண்டையும் அரைத்து… வெள்ளைத் துணியில் கட்டி மூன்று நாட்களுக்கு மூக்கு மற்றும் காதில் ஐந்து சொட்டும், கண்ணில் இரண்டு சொட்டும் விட்டு சாம்பிராணிப் புகை போட்டு வந்தால், சரியாகி விடும்.

கால் புண்:

காலில் ஏற்படும் சேற்றுப் புண்ணுக்கு, ஓமவல்லி இலை-50 கிராம், வேப்பிலை-50 கிராம், புகையிலை-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து 2 முதல் 3 நாட்களுக்கு புண்ணில் தடவி வந்தால், சரியாகி விடும்.

கோமாரி:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… துளசி-100 கிராம், விரலி மஞ்சள்-3 துண்டு, உப்பு 10 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொண்டு, தினம் ஒன்று வீதம் மூன்று நாட்களுக்கு உள்ளே கொடுதால் கோமாரி அண்டாது.

கோமாரி நோய் தாக்கிவிட்டால், கால் கிலோ மருதாணி இலையை இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி ஆற வைத்து, இளம்சூட்டில் கால் மற்றும் வாய்ப்பகுதியில் புண் உள்ள இடங்களைக் காலை-மாலை வேளைகளில் கழுவி விட வேண்டும்.

மூன்று மஞ்சள் வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால்… நோயில் இருந்து மாடுகள் மீண்டுவிடும்.

மூக்கடைப்பான்:

100 கிராம் கண்டங்கத்திரிப் பழத்தை (கறி முள்ளி) இடித்து வெள்ளைத்துணியில் கட்டி, ஒரு லிட்டர் ஆட்டுச் சிறுநீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, ஒவ்வொரு ஆட்டின் மூக்கிலும், 3 சொட்டுகள் வீதம் காலை-மாலை வேளைகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு விட்டு வந்தால் மூக்கடைப்பு சரியாகி விடும்.

படுசாவு (கத்தல் நோய்):

மழை முடிந்து 10 நாட்கள் வரை… ஒன்றரை மணி நேரம் மேய்த்துவிட்டு, ஒரு மணி நேரம் மேய்ச்சல் இல்லாத இடத்தில் நிறுத்தி, செரிமானம் செய்ய விட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் மேய விட வேண்டும்.

வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!

கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-
5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து… அரிசிக் குருணை அல்லது நொய்யில் கலந்து தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்… வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.

சுவாச நோய்..!!”

துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-1 இலை, தூதுவளை-1 இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-
5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால்… சுவாச நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.

கால்நடைக்கான மூலிகை உருண்டை!

பிரண்டை-100 கிராம், சோற்றுக் கற்றாழை-200 கிராம், நெல்லிக்காய்-2, முருங்கைக் கீரை-100 கிராம், கீழாநெல்லி-100 கிராம், கரிசலாங்கண்ணி-1
00 கிராம், குப்பைமேனி-100 கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-5 ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
சீரகம்-20 கிராம், மிளகு-10 கிராம், மஞ்சள் தூள்-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தக் கலவை… இடித்தக் கலவை… இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம் கலந்து சிறு சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில்… ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

நாட்டு மாடுகளை வளர்ப்போம் “நம் சந்ததிகளை காப்போம்”.

You might also like

Leave A Reply

Your email address will not be published.