பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் ஒரு விளக்கம்..!
மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும்.மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும்.சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் ‘கேப்னோடியம்’ எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.
கட்டுப்படுத்தும் மேலாண்மை:
பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.
தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல்.
‘தயோமீத்தாக்சாம்’ 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல்.குளவி ஒட்டுண்ணியான ‘அசிரோபேகஸ் பப்பாயினை’ வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.
– பூபதி, தோட்டக்கலை துணை இயக்குனர், மதுரை.