நிமிர்ந்து பார்த்த போது குளத்தின் மேல் பகுதி முழுவதுமே எண்ணெய் திவலைகளால் நிறைந்திருந்ததால் தீப்பற்றி எரிவது கண்டான்…!
பேராசிரியர் த.செயராமன் அவர்களோடு படத்தில் இருக்கும் மாணவன் சேதுபதி. 2009-ஆம் ஆண்டு திருவாரூர் – உச்சிமேட்டில் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் – எரிவாயுக் குழாய் வெடித்து ஆனந்தராஜ் என்ற மாணவன் எரிந்து இறந்து போனான்.
சேதுபதி எரிந்து கொண்டிருந்த நிலையில் குளத்தில் குதித்தான். (காலைக்கடன்களை முடிக்க குளத்தங்கரைக்கு சென்றவர்கள் ) தான் தப்பிவிட்டோம் என்று குளத்து தண்ணீரிலிருந்து நிமிர்ந்து பார்த்த போது குளத்தின் மேல் பகுதி முழுவதுமே எண்ணெய் திவலைகளால் நிறைந்திருந்ததால் தீப்பற்றி எரிவது கண்டான். தற்போது அவன் காதுகள் சுத்தமாக கருகிப்போயுள்ளது. இந்த நிகழ்ச்சி நெஞ்சை உருக்கக் கூடியதாக இருந்தது.
ஓ.என்.ஜி.சி. கிணறுகள் அல்லது எரிவாயுக் குழாய்களை மக்கள் வாழும் பகுதியில், வயல்களின் நடுவில், வீட்டின் கொல்லைபுறத்தில், சாலையோரங்களில் எல்லாம் பதிக்கிறார்கள்.
திருவாரூர் – கிடாரங்கொண்டான் தி.வி.க. கல்லூரியின் எதிர்புறம் வெறும் 50 அடி தூரத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு அமைத்திருப்பதை நீங்கள் காணலாம். எண்ணெய் கிணறுக்கு 20 அடி தூரத்தில் இரண்டு மாணவர் விடுதிகள் உள்ளன.
அதிலிருந்து ஒரு குழாய் வெடித்தால் அங்கு பயிலும் மாணவர்களின் கதி என்ன? அருகாமையில் தொகுப்பாய் வீடுகள் உள்ளதே, அவர்களின் நிலை என்னவாகும்? இவற்றையெல்லாம் கண்ணுற்ற பேராசிரியர் செயராமன் அவர்கள் மக்கள் நலமாய் வாழ வேண்டும் என்பதற்காக காவிரிப்படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டிணம் , திருவாரூர் மாவட்டங்களில் உள்ள ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பைத் தடுத்து நிறுத்த கடந்த 5 வருடமாக அயராது போராடி வருகிறார்.
எத்தனை வழக்குகள், எத்தனை கைதுகள், எதுவாகயிருப்பினும் எம் மக்களைக் காப்பது நமது கடமை, போராடா விட்டால் நாம் ‘தலைமுறை குற்றவாளி’ எனக் கூறப்பட்டு எதிர்கால சந்ததியர்களால் குற்றம் சாட்டப்படுவோம் எனக் கூறித் தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் த.செயராமன் அவர்களுக்கும் அவர்களது துணைவியார் சித்ரா செயராமன் அவர்களுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் !
(படம் : பேராசிரியர் த.செயராமனோடு மாணவன் சேதுபதி – 2014)