நாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்… வீட்டுக்குள் ‘மினி’ செக்கு!
உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று. ஆனால், சமீப காலமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக ஓரளவு மரச்செக்கு எண்ணெய் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலானவை கலப்படம் செய்யப்பட்டது என்பதுதான்.
நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எண்ணெய் கலந்திருக்கும். இந்த அளவுக்கு உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்களை வாங்கும் மக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால்தான் மரச்செக்கு எண்ணெய் வகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தருகிறதா என்றால் கேள்விக்குறிதான். மரச்செக்கு என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய்களிலும் போலியானவை கலந்திருக்கிறது. நேரிலேயே வரவழைத்து நம் கண்முன்னே செக்கை ஆட்டிக் கொடுக்கும் மரச்செக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில் எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையிலான இயந்திரம் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாட்டில் இந்த நவீன செக்கை தயாரித்து விற்பனை செய்து வரும் வடிவேல் குமாரிடம் பேசினோம்.
“நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல அரிய விஷயங்களை இன்று நாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் பல நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம், பளபளப்பாக உள்ள உணவுப்பொருட்கள் நல்லது என்ற வாசகம் நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டது. அதன்படி, ரெடிமேடாக கிடைத்த உணவுகளும், உணவுப் பொருட்களும் நமது வாழ்வை அழிவை நோக்கித் திருப்பியது. அதில் குறிப்பிடத்தக்கது எண்ணெய் வணிகம்தான். அதன் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் பிழியும் நவீன செக்கில் இருந்து தொடர்ந்து ஐந்து மணிநேரம் வரைக்கும் எண்ணெய் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் பின்னர் சிறிது ஓய்வு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ எள்ளையோ அல்லது தேங்காயையோ 20 நிமிடத்தில் பிழிந்து எண்ணெய்யை எடுத்துக் கொள்ள முடியும். எண்ணெய் அரைக்க ஸ்குரூவிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எண்ணெய் பிழியும்போது ஏற்படும் வெப்பமும் குறைவாகவே இருக்கும். இதில் வெளிப்படும் வெப்பம் அதிகபட்சமாகவே 25 டிகிரி அளவுக்குத்தான் இருக்கும்.
இது ஒரு அத்தியாவசியமான பொருளும் கூட. இந்த இயந்திரம் உபயோகப்படுத்துவதால் நமக்குத் தேவையான எண்ணெய்களை நாமே சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் தொகை வாங்கும் தொகை மட்டும்தான். இந்தக் கருவி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். இப்போதைக்கு விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது விலை குறையும் வாய்ப்பு அதிகம். இதில் எடுக்கும் எண்ணெய்யில் எந்தவிதமான வேதிப்பொருளும் மாறாமல் சுத்தமான எண்ணெய்யாக கிடைக்கிறது. கலப்பட எண்ணெய்க்கு இது மாற்றாக இருக்கும்” என்றார்.
இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையையே 100% பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஆனால், கலப்படத்தைத் தவிர்க்க நிச்சயம் உதவும் எனச் சொல்லலாம்.