அது 2000ம் ஆண்டு மார்ச் மாதம். எனக்கு 20 வயது, திருமணமான புதிது. என் கணவர் வீட்டில் மாமனார், மாமியார், நாத்தனார்கள் என அனைவரிடமும் நற்பெயர் வாங்க நான் கடினமாக உழைத்த நாட்கள் அது.
இவ்வுலகம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது, சற்று அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனது ஒவ்வொரு அடியையும் பார்த்து, பார்த்து எடுத்து வைக்க வேண்டிய சூழலில் இருந்தேன்.
ஓர் நாள் எனது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது நிறுத்தத்தில் வேனுக்காக காத்திருந்தேன். அப்போது தான் எனது கல்லூரி தோழி ரிங்கியை நீண்ட நாள் கழித்து பார்த்தேன்.
நான் திருமணமான பெண் என்பதையும் மறந்து, தோழியை கண்டதும் குழந்தைத்தனமாக மாறி சுற்றி இருப்பவர்கள் யாரையும் கவனிக்காது துள்ளிக் குதித்தேன்.
என் புது வாழ்க்கை…
ரிங்கி எனது புதிய வாழ்க்கை மற்றும் புதிய குடும்பத்தை பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினாள். திருமணமான புதிது, எனது அனுபவங்கள் பற்றி பகிர்ந்துக் கொள்ள யாரும் கிடைக்காமல் இருந்த தருணத்தில், மனம்விட்டு பேச ரிங்கி கிடைத்தாள். எனவே, முழுமையாக பேச துவங்கினேன்.
வேன்!
வேன் வந்தது, இருவரும் ஏறி அமர்ந்தோம். ஏறத்தாழ 15 நிமிட பயணம் அது. அவள் முதலில் எனது கணவன் பற்றி கேட்டாள், “அவர் சரியான அம்மா பிள்ளை” என கூறினேன். பிறகு அவள் எனது மாமனார் பற்றி கேட்டாள், “அவர் நல்லவர் தான், ஆனால் என்னை டிவி பார்க்கவிடுவதே இல்லை” என்றேன்.
அடுத்து மாமியார்…
ரிங்கியின் அடுத்த கேள்வி எனது மாமியார் பற்றியதாக இருந்தது. நான் அவளிடம்,”அவர் சரியான கொடுமைக்காரி’ என்றேன் ஏனெனில் அது தான் உண்மை. தொடர்ந்து,”அவர் என்மீது குற்றம் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். எதற்கு எடுத்தாலும் எனது பெற்றோரை குற்றம் கூறுகிறார். அவரது மகளை புகழ்ந்தும், என்னை இகழ்ந்துமே பேசுகிறார்” என எனது மாமியார் பற்றி பெரிய குற்றச்சாட்டு கூறினேன்.
கல்லூரி காலம்…
அப்போது ரிங்கி எங்கள் கல்லூரி காலம் பற்றி பேச துவங்கினாள். அது எனக்கு பெரும் நிம்மதியை அளித்தது. என்னை பற்றி மிகவும் பெருமையாக பேசினாள். கல்லூரி காலத்தில் நான் எவ்வளவு அழகு, அவ்வளவு தைரியமான பெண் என விவரிக்க துவங்கினாள் ரிங்கி.
டோன்ட் கேர்!
எங்களுடன் வேறு நபர்களும் வேனில் பயணிக்கிறார்கள் என்பதை மறந்து, பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசி வந்தோம். மேலும், இந்த தருணத்தை விட்டால் மீண்டும் எனது தற்போதைய நிலை பற்றி பேச யாரேனும் கிடைப்பார்களா என எனக்கு தெரியாது. எனவே, கிடைத்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என எல்லாவற்றையும் பேசினேன்.
வேன் வீடு அடைந்தது…
வேன் வீட்டை அடைந்தது ஆனால், எங்கள் பேச்சு முடியவில்லை. காசு கொடுக்க நான் முற்பட்ட போது, முன் இருக்கையில் இருந்து, “நான் காசு கொடுக்கிறேன் பாஹூ” என எனக்கு மிகவும் பரிச்சயமான குரல்… அது எனது மாமனார். நான் ஒரு நிமிடம் உறைந்து போனான். அவ்வளவு தான் எனது கதி என நினைத்தேன்.
நல்ல மருமகள்!
யார் என்ன கூறினாலும் அடங்கி போய், என்னை ஒரு நல்ல மருமகளாக மட்டும் காண்பித்துக் கொண்டிருந்தேன். இந்த நல்ல மருமகள் பிம்பம் இன்றோடு உடைய போகிறது என்ற அச்சம் என் மனம் முழுக்க சூழ்ந்து கொண்டது. எப்படியும் எனது மாமனார் என்னை பற்றி, நான் பேசியதை பற்றி வீட்டில் அனைவரிடமும் கூறிவிடுவார் என கருதினேன்.
டீ!
வீட்டுக்குள் சென்றதும், அனைவருக்கும் டீ போட்டு கொடுத்தேன். என் மாமனார் மிகவும் சாந்தமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார். யாரிடமும் ஏதும் கூறவில்லை. பின் என்னை ஒரு அரைமணிநேரம் டிவி பார்க்க வைத்தார்.
ஒருவேளை நான் இல்லாத போது, அனைவரிடமும் கூறுவார் என எண்ணினேன். ஆனால், அவர் யாரிடமும் கூறவில்லை.
புதிதாக திருமணமான பெண் இப்படி தான் நடந்துக் கொள்வாள், அவளாக அனைத்தும் புரிந்துக் கொள்வாள் என அவர் எண்ணினார்.
என் மாமனார் இறந்து பத்து வருடங்கள் ஆகிறது. இன்னும் அவரது நினைவுகள் என் மனதுக்குள் மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.