தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர்.
இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் மரணம் அடைந்தனர்.
எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.
ஆனால் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் பேட்டி அளித்தாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் ஆலை திறக்கப்படும் என, தலைமை செயல் அதிகாரி கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது போன்ற கருத்து எதுவும், தலைமை செயல் அதிகாரி வெளியிடவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கு ஆலை முன்னுரிமை அளித்து வருவதாகவும், ஆலை மூடுவதற்கான உத்தரவு அமலில் இருக்கும் போது, எந்த காரணம் கொண்டும் ஆலையை திறக்க முடியாது என, ஸ்டெர்லைட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.