கப்பல் விபத்தில் இறந்த 3 குமரி மீனவர்கள் உடல் அடக்கம்; 9 பேரை தேடும் பணி தீவிரம்!
கேரள மாநிலத்தில் மீன்பிடி விசைப்படகுமீது கப்பல் மோதிய விபத்தில் இறந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. குமரியைச் சேர்ந்த மாயமான 7 மீனவர்கள் உட்பட 9 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
மாயமான மீனவர்கள்
கேரள மாநிலம் கொச்சி முனம்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓசியானிக் என்ற மீன்பிடி படகில் 14 மீனவர்கள் நேற்று முன் தினம் மாலை ஆழ்கடலில் மீன்பிடி தொழிலுக்குச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறையைச் சேர்ந்த ஏசுபாலன், ராஜேஷ்குமார், தினேஷ், யாக்கோபு, யுகநாதன், ஷாலு, எட்வின், முள்ளூர் துறையைச் சேர்ந்த ஜேசையா மகன் சகாயராஜ், சீமோன் மகன் சகாயராஜ், மணக்குடியைச் சேர்ந்த லிட்டல் ராஜ் மகன்கள் வாட்சன், மரியராஜ், கேரள மாநிலம் முனம்பத்தைச் சேர்ந்த ஷிஜூ, மேற்குவங்கத்தை சேர்ந்த நரேன் சர்க்கார் மற்றும் மேலும், ஒருவர் அந்தப் படகில் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
எம்.வி.தேஷ் சக்தி
படகை ஓட்டிய எட்வின் விழித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்தச் சமயத்தில் விசைப்படகின் பின்புறமாகச் சரக்குக்கப்பல் மோதியுள்ளது. இதில் படகு உடைந்தது. படகில் இருந்த டீசல் கடற்பரப்பில் மிதந்ததை மோப்பம் பிடித்து மற்ற விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது உடைந்த படகு துண்டுகளைப் பிடித்தபடி மிதந்துகொண்டிருந்த எட்வின், மற்றும் நரேன் சர்க்கார் ஆகியோரை உயிருடன் மீட்டனர். மேலும் ஜேக்கப், யுகநாதன், சீமோன் மகன் சகாயராஜ் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. கடலில் மாயமான 9 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
செய்தி :விகடன்