தன் குஞ்சுகள் அங்கிருந்து வெளியே வர முடியாது என்பதை அறிந்தது…! எலி வலையானாலும் தனி வலையாக இருப்பது மிக நன்று….
தந்தையின் முடிவு சரி தானா ?
ஒரு ஊரில் நல்ல குடும்பத் தலைவர் தன் மனைவி மற்றும் நான்கு மகன்களுடன் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார்…
நான்கு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்த அவர் தன் சொத்தில் ஆளுக்கு ஒரு பங்கைப் பிரித்துத் தந்தார். தன் தேவைக்காக சொத்தில் ஒரு பங்கை வைத்துக் கொண்டார்…
சில ஆண்டுகள் சென்றன. அவரது மனைவியும் இறந்து விட்டார். தனியாகவே வாழ்க்கை நடத்தி வந்தார் அவர்…
தந்தை தனியாகத் துன்பப்படுவதை மகன்களால் தாங்க முடியவில்லை. ஒரு நாள் நால்வரும் ஒன்றாக அவரிடம் வந்தார்கள்.
அப்பா ! நீங்கள் ஏன் தனியாகத் துன்பப்பட வேண்டும். உங்களுக்கு என்று இருக்கும் சொத்தை எங்களுக்குப் பிரித்துத் தந்து விடுங்கள். எங்களில் யார் வீட்டில் வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல தங்கியிருங்கள். உங்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பாசத்துடன் அழைத்தார்கள்.
தந்தை நினைத்தார். மகன்களுடன் தங்குவது நல்லது என்று அவருக்குப் பட்டது. இருந்தாலும் சிந்தித்து முடிவு செய்வோம் என்று மனதுக்குள் நினைத்தார்.
அன்புக்குரிய எனது அருமை மகன்களே ! இரண்டு மாதம் கழித்து வாருங்கள் நான் என் எண்ணத்தை சொல்கிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
பிள்ளைகளைத் தந்தை காப்பாற்றுவது போல தந்தையை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா ? இதை எப்படி அறிவது ? என்று சிந்தித்தார் தந்தை…
தன் வீட்டு வேலையாளை அழைத்த அவர். நம் வீட்டுத் தோட்டத்தில் குருவிக் கூடு ஒன்று கட்டியுள்ளது. அதில் குருவிக் குஞ்சுகள் உள்ளன. தாய் குருவியை ஒன்றும் செய்ய வேண்டாம் அதன் குஞ்சுகளை மட்டும் எடுத்து வா என்றார்…
வேலையாளும் அவர் சொன்னது போலவே செய்தான். கூட்டில் இருந்த நான்கு குருவிக் குஞ்சுகளை கொண்டு வந்தான்…
அந்த குருவிக் குஞ்சுகளை தகுந்த பாதுகாப்போடு ஒரு கூண்டில் அடைத்தார் தந்தை. அந்த கூண்டை ஜன்னல் அருகே தொங்க விட்டார்…
தாய்க்குருவி அந்தக் கூண்டின் அருகே வந்தது. கூவியபடியே அதை சுற்றிச் சுற்றிப் பறந்தது…
தன் குஞ்சுகள் அங்கிருந்து வெளியே வர முடியாது என்பதை அறிந்தது. வெளியே பறந்து சென்று அது வேளா வேலைக்குத் தவறாமல் தன் குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு வந்து ஊட்டியது…
சிறிது காலம் சென்ற பின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தது. கூண்டிற்கு உள்ளேயே பறக்கத் தொடங்கின…
இதை அறிந்த அந்த தந்தை. அந்த குருவி கூண்டிற்கு வெளியே எளிதில் ஒட்டிக் கொள்ளும் பசையை அப்பி வைத்தார்…
குஞ்சுகளுக்கு உணவூட்ட வந்த அந்த தாய்க்குருவி அந்த பசையில் ஒட்டிக் கொண்டது. அதனால் அந்த பசையில் இருந்து விடுபட முடியவில்லை…
இதைப் பார்த்த அவர் கூண்டைத் திறந்தார் அதில் இருந்த நான்கு குஞ்சுகளும் வெளியே பறந்து சென்றன…
தாய்க் குருவியைத் தகுந்த பாதுகாப்போடு அந்த கூண்டில் அடைத்து வைத்தார்…
வெளியே பறந்து சென்ற அதன் குஞ்சுகள் அங்கு வரும். தாய்க்குருவி வரும் துன்பத்தைப் பார்க்கும். அதற்கு உணவு கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார் அந்த தந்தை…
ஆனால் அதன் குஞ்சுகள் எதுவுமே அந்த கூண்டில் பக்கமே வரவில்லை. பசியால் வாடிய அந்த தாய்க்குருவிக்கு தானியங்கள் அளித்து. பிறகு அந்த கூண்டைத் திறந்து விட்டார்…
அவர் கூறியது போலவே இரண்டு மாதங்கள் கழித்து அவரது நான்கு மகன்களும் வந்தார்கள். அப்பா என்ன முடிவு செய்தீர்கள் என்று கேட்டார்கள். எங்களுடன் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள்…
அவரது அன்புக்குரிய மகன்களிடம் அவர்கள் மனது நோகாமல் விதமாக சொன்னார்…
மகன்களே என்னை இப்படியே இருக்க விடுங்கள். உங்கள் அன்னை வாழ்ந்த இந்த வீட்டில் வாழ்ந்து எனக்கு பழக்கமாகி விட்டது. எனவே நான் இங்கே தனிமையாகவே வாழ ஆசைப்படுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறி அவரது மகன்களை அனுப்பி வைத்தார்…
அன்புக்குரியவர்களே! நம் பிள்ளைகள் நம்மை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருந்த போதிலும். நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காலம் சமயத்தில் நமக்கென்று ஏதாவது சேர்த்து வைத்துக் கொள்வது நன்று…
எலி வலையானாலும் தனி வலையாக இருப்பது மிக நன்று….
படித்ததில் பிடித்தது…