சாராயத்திற்கும் பனைமரம் அழிவுக்கும் நெருங்கிய அரசியல் இது…!

0 456

1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவை அடைக்கப்பட்டன.

பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து 2001 வரை, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள், சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடை செய்யப்பட்டிருந்தன.2001 ல் இருந்து கள் தடை தொடர்ந்தது , சாராய மது பானங்களுக்கு தடை இல்லை…

ராஜாஜி காலம் தொட்டு மதுவிலக்கு அமலில் இருந்தாலும், கள்ள சந்தையில் சாராயம் காய்ச்சுபவர்கள் அதிகரித்தனர், மருந்துக்கு கூட கள் எடுக்க முடியாது, பதனீர் இறக்கினாலும், கள் இறக்கியதாக வழக்கு தொடரப்பட்டு பனைஏறுபவர்களை சிறையில் அடைத்தனர் ..இரண்டு மூன்று முறை தன் வாழ்வாதாரத்திற்காக சிறை சென்ற பனைஏறுபவர் அந்த பனைஏற்றத்தையே விட்டு பலர்வேறு தொழில் மாறினார்கள், சிலர் மட்டும் பல எதிர்ப்புகளை மீறி பதனீர் ஓலை மட்டை என கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன்குடும்பத்தை நடத்தி சென்றனர்.பல லட்ச பனை ஏறும் தொழிலாளர்கள், தான் வாழ வழி இன்றி நிற்கதியாய் நின்றனர்.. யோசித்து பாருங்கள் நீங்கள் உங்கள் வேலையை இழந்தால் எத்தனை வருடங்கள் சமாளிக்க முடியும், இதற்கிடையே சாராயம் காய்ச்சுபவர்கள் அரசியலில் இரண்டு பிரதான கட்சிகளில் அங்கம் வகித்தனர்..

சாராய கடைகளுக்கு கூட்டுறவு அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது, காரணம் சாராயம் காய்ச்சியவன் எல்லாம் கரை வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபையில் அமளியில் குதித்து யார் பெரியவன் என அமளியில் குதிக்க ஆரம்பித்தான்.. தனது சாராய ஆலைகளை பெரிய அளவில் விரிவு படுத்தினார்கள் . ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் போட்டி போட்டு கொண்டு மது அலைகளை திறந்தனர்…


இங்கே பனைஏறியவனுக்கோ கேட்க நாதி இல்லை… கள்ளை அனுமதித்தால் சாராய விற்பனை பாதிக்கும் என்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட கரைவேட்டிகள் ,பனைஏறியவன் என்ன ஆனால் எனக்கென்ன அவனுக்கும் குழந்தை உண்டு குடும்பம் உண்டு என்பதையே மறந்து சாராயம்விற்ற பணத்தில் அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு இவ்வளவு பணம் என முழங்கினார்கள்… அந்தோ பாவம் அவன் ஒரு மரத்தில் வருமானம் தரக்கூடிய கள்ளை மட்டும் எடுக்க கூடாது என்பது எவ்வளவு பெரிய இழப்பு அவனுக்கு, கருப்பட்டி காய்ச்சினான், வியாபாரி அடிமாட்டு விலைக்கு வாங்கினான்.. பணத்தேவை அதிகரிக்க முன்பணம் வாங்கி வட்டிக்கு கருப்பட்டி விற்க தொடங்கினான் .. வட்டியும் சில நேரங்களில் குட்டி போட்டது வாங்கிய பணத்திற்கு காலை முதல் மாலை வரை பனை ஏறி காய்ச்சியும் அவனால் வாங்கிய முன் பணத்திற்கு வட்டி கட்ட முடியா சூழ்நிலையும் உருவானது..

இது மிச்ச மீதி இருக்க பனைஏறியின் நிலை இதுவானால், பனை ஏறி கருக்கு,ஓலை, மட்டை,தும்பு, நார் தருவான் அதை நம்பி நாம் கைத்தொழில் செய்து பிழைக்கலாம் என்ற பத்து லட்சத்துக்கு அதிகமான கைவினை கலைஞர்கள் பனைமூலப்பொருட் கள் கிடைக்காமல் பாரம்பரிய தொழிலை விட்டு நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து மீதி நாள் கூலி வேலை செய்து காலம் பல சென்றது.. 800 அதிகமான பாரம்பரிய தொழில்கள் பல இருந்த இடம் தெரியாமல் அவனோடு அழிந்தது…

அவனுக்கு பிறகு பனையை விறகிற்கு விற்றால் பணம் கிடைக்கும் ,இதில் என்ன இருக்கிறது, நன்றாக எரிய கூடியது , வெள்ளையன் காலத்தில் இருந்த 50 கோடி பனைமரங்கள் கொள்ளையன் காலத்தில் 5 கோடி ஆனது…
கள் தீமையாம், சாராயம் நன்மையாம், சித்த மருத்துவத்துக்கு கள் மருந்து கிடைப்பதில்லை, தோல் நோய்களுக்கும் கிடைப்பதில்லை, தமிழன் உணவே மருந்து என்பதை மறந்து மருந்தே உணவு என தன் வாழ்நாளை நோயாலே பெருக்கி கொண்டான்.. கள் தடையால் பனை தொழில் அழிந்தது, கருப்பட்டி உற்பத்தி குறைந்து வெள்ளை சீனியின் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு, விளைவு நீரழிவு நோய் ஒவ்வொரு மருத்துவமனையிலும் டயாலீஸ் பண்ண அணிவகுப்பு…

நாம் மாறி விட்டோம் நாகரீகத்தில் வளர்ந்து விட்டோம் பனை உணவுகளையும் பாரம்பரிய தொழில் முறைகளையும் மறந்து விட்டோம், பனை குறைந்தது போல கருத்தறிப்பதும் குறைந்து பல லட்சங்களை செலவு செய்து பிறக்கும் குழந்தைக்கும் பல நோய்களோடு வாழ வழி செய்து ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறோம்…
கள் தானே அதை குடிப்பது இழிவானது தானே என்று நாம் நினைத்து கள் என்பது என்ன என்பதையே சிந்திக்க தவறி விடுகிறோம், தமிழ்நாட்டின் மாநில மரம் கள் தடையால் அழிந்து கொண்டே போகிறது பாரீர். மதுப்பிரியர்களின் வருமானத்தில் இந்த அரசு இயங்குகிறது என்றால் , அதை உற்பத்தி செய்யும் ஐந்தாறு நிறுவனங்களின் வருவாய் எவ்வளவு? இதற்கு பதிலாக பனைமரத்தின் கள் அரசு மதுபானமாக இருந்தால் எவ்வளவு வேலைவாய்ப்புகள், அண்டை மாநிலமான கேரளாவை பாருங்கள்.. நீங்கள் மாறி மாறி ஆட்சி செய்து உங்கள் தொப்பைகளை நிரப்பி கொள்கிறீர்கள்… பாவம் அவன் நிரந்தரமாக பனைஏற முடியாமல் எப்போதாவது பனையில் ஏறி கயிறு அறுந்து விழுகின்றான்…


ஒரு பனைஏறுபவனை நம்பி பத்து பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் இன்னும் பத்து பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.. இது தானே காலங்காலமா நடந்து வந்த நிகழ்வு, நீங்கள் மதுவிலக்கு கொண்டு வருகின்றேன் என கூறி நயவஞ்சகமாக கள்ளை தடை செய்து சாராயம் உற்பத்தி செய்து ஆட்சி நடத்துவது எவ்வளவு ஒரு நல்லொழுக்கம்….
பனை வளர்ப்போம் பனையை பயன்படுத்துவோம், அது அடி முதல் நுனி வரை பயன்தரும்

பதிவு: அமுத சுரபி

You might also like

Leave A Reply

Your email address will not be published.