அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘ஹெட்லெஸ் சிக்கன்’ திருவிழா கொண்டாடப்படுகிறது.இந்த விழாவுக்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.
அமெரிக்காவின் கொலராடோவை சேர்ந்த விவசாயிகளான ஓல்சன் மற்றும் கிளாரா தம்பதியினர். இவர்கள் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தனர். ஓல்சன் கோழிகளை வெட்டிக்கொடுக்க அவரது மனைவி அதனை சுத்தம் செய்து கொண்டிருந்தார். 40-50 கோழிகளை இவ்வாறு வெட்டி இருப்பர். அப்போது ஒரு சேவல் மட்டும் தலை வெட்டப்பட்ட நிலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
வழக்கமாக கோழிகளின் தலைகளை வெட்டியபிறகு கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் ஓடும் பிறகு அது இறந்து விடும். அதுபோலதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த ஒரு சேவல் மட்டும் தலை இல்லாமல் முண்டமாக சுற்றிக்கொண்டிருந்தது.
அந்த சேவலை ஒரு பெட்டியில் போட்டி மூடிவிட்டனர். இரவு முடிந்து காலை வேளையில் அந்தப்பெட்டியை திறந்தால் ஆச்சர்யம் சேவல் இறக்காமல் உயிருடன் இருந்துள்ளது. சேவல் குறித்து தகவல்கள் மெல்லப் பரவ உள்ளூர் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க ஆர்வமாயினர். இந்தச் சேவலின் புகைப்படமும், கட்டுரைகளும் வெளியாகின. இதனால் இந்தசேவல் பிரபலமடைந்தது.
இந்த சேவல் உயிர்வாழ்வதற்கு திரவ உணவுவகைக்களை கொடுத்து வந்துள்ளனர். சொட்டு மருத்துகொடுப்பது போல் உணவுகளைக் கொடுத்துள்ளனர். மேலும் அதன் உணவுக்குழாய்களில் அடைப்பு ஏற்படாதவாறு ஊசிகள் மூலம் தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவலால் ஓல்சன் தம்பதியனரின் வாழ்க்கை தரமும் உயர்ந்தது. அமெரிக்காவில் ஓல்சன் தனது சேவலுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஊசியை எடுத்துச் செல்ல மறந்து விட்டார். இதன் காரணமாக உணவுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு 1947ஆம் ஆண்டு சேவல் உயிரிழந்தது.
இதுதொடர்பாக ஆராய்ச்சியை மேற்கொண்ட பல்கலைக்கழகங்கள் கூறியதாவது, சேவலில் தலையை வெட்டும்போது அதன் கண்கள்,அலகு போன்ற பகுதிகள் மட்டும் வெட்டப்பட்டது. சேவலின் முழுத்தலையானது அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு போன்ற அமைப்பில் தான் உள்ளது. ஓல்சன் முகத்தை மட்டும் வெட்டியதால் சேவலின் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீத பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.இதனால் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.