தீபாவளி ஊறுகாய்!
———————————
பரபரப்பே இல்லாதவாறு,
வெறிச்சோடி காணப்பட்டன
இரயில்நிலையமும், பேருந்து நிலையமும்;
தீபாவளி கொண்டாட்டமாம்!
அங்கொன்று இங்கொன்றுமான
பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கியபடி,
வீதியிலே நடக்கலானான்
பிளாட்பாரத்தில் வாழும் சிறுவன்!
கண்களை ஈட்டியாகக் குத்தின
கண்ணில்பட்ட புத்தாடைகள்!
“அன்பைக் கேட்டால்
அளவுக்கதிகமாக தருவாள் அம்மா;
ஆடையைக் கேட்டால்,
அப்பன் இறந்ததைச் சொல்லி அழுவாளே!”
“வெடித்துச் சிதறி விழுந்தன பட்டாசுகள்,
ஏழைச் சிறுவனின் ஏக்க இதயத்தை
சுக்கு நூறாக நொறுக்கிய படியே!”
“புன்முறுவலிட்டன சில சிறுசுகள்
வாழ்த்துச் சொல்வது போல!
முகம் சுளித்தன சில பெருசுகள்
எரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டியபடி!”
சாப்பிட ஏதாவது தருவார்களா? என
நாலைந்து வீதிகளில் அலைந்தவனுக்கு,
கடைசி வீட்டில் கிடைத்தது
தீபாவளிப் பலகாரங்களில் சில!
தங்கிய இடத்திற்கு வந்தான் தாமதமாக!
பசியை வெல்ல பலகாரத்தை எடுக்க,
ஊசிப் போயிருந்தது!
“தாம் உண்பதைத் தராமல்,
குப்பையில் கொட்டுவதைத்தான்
தானமாகத் தருவார்களோ?”
வழக்கம் போல்,
சட்டியிலிருந்த பழையசோற்றுடன்,
மடித்து வைத்திருந்த
மட்டை ஊறுகாயைத் தொட்டுக்கிட்டு,
மதிய உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்;
“என்றைக்கும் இல்லாதவாறு
அதிகமாக உறைத்தது ஊறுகாய்!’
பலரின் தீபாவளி இப்படி தான் நகர்கிறது..!
பிடித்தால் பகிருங்கள்
ஆக்கம்: மை.ராஜன்