ஒரு பெண்ணின் மாதவிடாய் பற்றிய உருக்கமான கடிதம்..!

0 318

அன்பானவனே!

“நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய். தினம் தினம் நீ தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கிறாய். அதிகம் தேடப்படும் வாசகங்களில் ஒன்றாக இணையத் தேடுபொறிகள் எங்கள் அந்தரங்கங்களின் பெயர்களைத்தான் சொல்கின்றன.

என் நண்பனாய், கணவனாய், தகப்பனாய், காதலனாய், சகோதரனாய் இன்னும் எல்லாமுமாய் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட உனக்கு பெயர் போட்டு கடிதம் எழுதும் அளவுக்கான சுதந்திரத்தை இன்னும் சமூகம் வழங்கவில்லை. ஏன் என் சொந்த சகோதரியிடமே மனம்விட்டுப் பகிர முடியாததுதானே அந்தரங்கம்?

வீட்டில் யாருக்கும் நான் படிப்பதில் விருப்பமில்லை. திருமணம் முடித்துவிட்டால் ஒரு சுமை முடிந்ததென்று நினைத்திருந்தார்கள். நானோ, அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். தனியார் நிறுவனங்களின் வேலை நேரங்கள், வீட்டு வேலையும், அலுவலக வேலையும் இணைத்துச் செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதில்லை என்பதால், அரசு வேலை அல்லது வங்கிப் பணி என்பதே எனது தேர்வாக இருந்தது.

தேர்வு நாள் நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகரித்தது. படிப்போமா? தேர்ச்சியடைவோமா? என்பதல்ல பிரச்சனை. சென்ற மாதத்தில் ‘மாதவிடாய் முடிந்த தேதியிலிருந்து எண்ணிக் கொண்டிருக்கிறேன். சரியாக 29 ஆம் நாள் தேர்வு”. அடுத்த மாதவிடாய் ஆரம்பிக்கலாம். தயாராக ‘விஸ்பர்’ வாங்கிக் கொண்டேன். அகலமானதும், நாள் முழுவதும் சுதந்திர உணர்வும் கொடுக்கும் என விளம்பரத்தில் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். எதுவும் அறிகுறி இல்லை என்ற ஆசுவாசமான மனநிலையோடே பேருந்தில் ஏறினேன். ஜன்னலோரத்தை லயிக்கும் பேருந்துக் கவிதைகளை நினைக்கவும் முடியாத நரகம் அது.

நெரிசலில் பிதுங்கி நின்றேன். கழுத்துக்கு அருகில் யாரோ மூச்சு விடுவதுபோல இருந்தது. கூட்ட நெரிசலில் இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது. திரும்ப விரும்பினேன். அது நீயாக இருக்கக் கூடாது.

ஆம் நீயில்லை. ஒரு அக்கா அருகில் நின்றிருந்தார். வெகு தொலைவில் நின்றபடி, என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாய் நீ. அடிவயிற்றில் மெதுவாக மாற்றங்கள் தெரியத் தொடங்கின. விஸ்பர், கைப்பைக்குள் இருக்கிறது. ‘தேர்வு மையத்துக்குச் சென்றதும் பாத்ரூமுக்குத்தான் முதலில் செல்ல வேண்டும்.’ மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

“வேகமா எறங்குமா” அதட்டல் குரல். அது நீதான். கொஞ்சம் மெதுவாய்ச் சொல்லியிருக்கலாம். விசும்பலாய் இருந்தது, ஆனாலும், இதுவெல்லாம் பழகிவிட்டது.

சாலை மருங்கில் இருந்த மரங்களை வெட்டியிருந்தார்கள். நடைபாதைக்கான இடத்தில் நீ பேசியபடி நின்றிருந்தாய். அந்த சிகரெட்டை புகைப்பதில் உனக்குத்தான் எத்தனை ஆனந்தம். அதில் என்னதான் இருக்கிறது?. அசையாமலும், வேகமாகவும் பாத்ரூமைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். அவ்வளவு பெரிய கல்லூரி அது. எல்லோரும் அவரவர் எண்களுக்கான தேர்வு அறையை பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். ஒருவழியாக பாத்ரூமை அடைந்துவிட்டேன். குமட்டலாக இருந்தது. பொதுக் கழிப்பிடங்கள் எப்படி இருக்குமென்பது உனக்கும் தெரியும்தானே?. ஒரு நாள்தான் தேர்வு, இதற்காக புதிய கழிப்பிடமா கட்டுவார்கள்?. அங்கு கொஞ்சமும் தண்ணீர் இல்லை. இதற்காகத்தான் கைப்பையில் தண்ணீர் பாட்டில் எப்போதும் வைத்துக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே தாமதமாகிவிட்டேன். தேர்வு அறைக்குள் மிகத் தாமதமாகவே நுழைந்தேன். விஸ்பர் மாற்றியிருப்பினும், உதிரப் போக்கு உறுத்திக் கொண்டுதான் இருந்தது. அரிப்பும், அசூசையும் கொண்ட உணர்வு அது. ‘சே, இந்த உடலோடுதான் வாழ வேண்டுமா?’. நான் என்னையே சில சமயங்களில் வெறுக்கிறேன்.

 

வீட்டுக்கு வந்தபோது, உதிரப்போக்கு அதிகமாகத் தொடங்கியது. எனக்கென ஒரு அறை இல்லாத வீடு அது. உடைமாற்றி குளித்துட்டு, நைட்டி அணிந்துகொண்டேன். ஓரளவு ஓய்வாய் இருந்தது.

வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அது என்ன நிகழ்ச்சியென்று நினைவில்லை. பேசியது நீதான், “அத்தினி, சித்தினி, பத்தினி” என பெண்கள் குறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாய். நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் நீயே தோன்றி பெண்ணுடையில் சாகசங்கள் செய்துகாட்டினாய். இப்படி ஒரு நாள் நீ உடை உடுத்தும்போது, “விஸ்பரைக்” கொடுக்க வேண்டும். அதனை எப்படி அணிவதென்று நீ விழிப்பாய் என நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

இரவும் உதிரப்போக்கு நின்றபாடில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.