உலகம் முழுவதும் சோழர்களின் புகழ் பரவியது எப்படி..? சோழர்கள் கையில் எடுத்த மாபெரும் புரட்சி தான் என்ன..?
நீர்மேலாண்மை..
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சிதம்பரம் நடராஜர் கோவிலில், பூமிக்கு அடியில், முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், சிவராம கிருஷ்ணன், கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆய்வு செய்தது.
சுட்ட செங்கல் : அப்போது, ஆயிரக்கால் மண்டபத்தின் கீழே, நிலவறை இருப்பது தெரியவந்தது. அதன் அமைப்பை ஆய்வு செய்தபோது, பருவமழைக் காலங்களில், கோவிலில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலாகவும் அது பயன்படுத்தப்பட்டது, தெரியவந்தது.மழைநீர் வடிகால், ஆயிரங் கால் மண்டபத்தின், மேற்கு பகுதியில் இருந்து, கோவிலின் நேர் வடக்கே உள்ள காளி கோவில் சிவப்பிரியை குளத்தை சென்றடைகிறது.
இந்த கால்வாய், 1250 மீ., நீளத்தில், நிலமட்டத்தில் இருந்து, ௧,௧௯ மீ., ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ௭௭ செ.மீ., உயரம் மற்றும் ௬௩ செ.மீ., அகலத்தில் கால்வாயின் உள் அளவு உள்ளது. நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர் என்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு செங்கல், 24 செ.மீ., நீளமும், 15 செ.மீ., அகலமும், 5 செ.மீ., கனமும் கொண்டதாக உள்ளது.
செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 அடி அகலம், 5 அடி நீளம் கொண்ட பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழகத்தை ஆட்சி புரிந்த சோழமன்னர்கள், கலை மற்றும் கட்டடக் கலைகள் மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையிலும், தனித்த கவனத்தை செலுத்தி உள்ளனர்.
அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை.
கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்..
குறிப்பாக, கொள்ளிடத்தில் வரும் நீரினை, நேர் எதிர் திசையில் செலுத்தி, வீராணம் ஏரிக்கு கொண்டு வந்ததோடு அல்லாமல், அங்கிருந்து வெள்ளாற்றின் வழியாக, வடலுார் அருகே உள்ள வாலாஜா ஏரி வரை, 70 கி.மீ., தூரம் காவிரி நீரை கொண்டு வந்தனர்.இதனால், 30,000 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைந்தன. இதற்கு அவர்கள், ’பாம்பு போன்று வாய்க்கால் அமைத்தால், நீர் பனையேறும்’ என்ற நீர் மேலாண்மை விதியினை வகுத்து, அதன்அடிப்படையிலேயே, கொள்ளிடத்தின் குறுக்கே, வடவாற்றை அமைத்து, வடக்கு திசையில் நீரினை கொண்டு வந்து வீராணம் ஏரியில் சேர்த்து உள்ளனர்