அலைவரிசையால் சிட்டுகுருவி அழிந்தது என்றால் ஏன் கொசு அழியவில்லை..?
சின்னஞ்சிறிய உயிரிமான சிட்டுக்குருவிகள், அழிந்து வரும் அரியவகைப் பறவை இனமாகி வருகிறது. வலிமையான உயிரினங்களின் வாழ்வாதாரங்களையே கபளீகரம் செய்துவிட்ட உலகமயமாக்கலின் ஆக்டோபஸ் கரங்கள், மிகச்சிறிய உயிரினமான சிட்டுக்குருவிகளை மட்டும் விட்டுவைக்குமா என்ன ?
அழிந்து வரும் அந்த உயிரினத்தைக் நினைவு வைக்கவே சிட்டுகுருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது போல..!
துறுதுறுவெனத் துள்ளிப் பறக்கும் சிட்டுக்குருவிகளைப் பார்க்கும் போதே நமது மனதுக்கும் சிறகு முளைத்துப் பறக்கத் தொடங்கி விடும். மனதை மயங்க வைக்கும் அவற்றின் அழகு, சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு, சின்னஞ்சிறு குருவி போலே என எத்தனையோ கவிஞர்களின் பாடுபொருளாக மாறியிருப்பதையும் பார்த்திருக்கிறோம். அத்தகைய சிட்டுக்குருவிகளை இனி கற்பனைகளிலும், கதைகளிலும் மட்டுமே பார்க்க முடியும் எனும் அளவுக்கு, அழிவின் விளிம்புக்கு அந்த உயிரினமே தள்ளப்பட்டுள்ளது. மனையிடங்களாக மாறி வரும் தோப்புகள், பெருகி வரும் கான்க்ரீட் கட்டடங்கள் என, சிட்டுக்குருவி எனும் அந்தச் சின்னஞ்சிறு உயிர்கள் வாழ இடமில்லாத, வறண்ட உலகமாக மாறி வருகிறது இந்தப் பூமிப்பந்து.
நவீனத்தின் கொடும் சக்கரங்களில் சிக்கி சிதையும் இயற்கையின் அரிய படைப்பான எளிய சிட்டுக்குருவிகளை எப்படிக் காக்கப் போகிறோம்?
விளைநிலங்க பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி மருந்துகளே சிட்டுக்குருவிகளின் இத்தகைய அழிவுக்குக் காரணம் என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அலேபுரம் கிராமத்தினர், சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது ஓர் ஆறுதலான செய்தி. சிட்டுக்குருவிகள் போன்ற பறவை இனங்கள் அழிவது, சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.